ஞாயிறு, 31 மே, 2015

மௌனம் உறைந்த தேசம் 18

சிதைந்த கட்டடச் சுவரில் சாம்பற் பறவை

தொடர் 18

விடிந்தால் நாங்கள் போர் நடந்த இடங்களான வன்னி, கிளிநொச்சி, முள்ளி வாய்க்கால் உள்ளிட்ட இடங்களைப் பார்த்துக் கொண்டே கொழும்பு போய்ச் சேர்வோம் என்ற விவரத்தை றஞ்சி சொன்னார்.

போர் நடந்த காலக்கட்டத்தில் பத்திரிகையில் செய்திகள் போட தேடும்போது இந்தப் பெயர்கள் என்னை மிகவும் துன்புறுத்துபவையாக மட்டுமல்ல, பயமுறுத்துபவையாகவும் எனக்கு இருந்தன. உண்மைதான்கொஞ்சம் இயல்பு நிலை என்னில் தப்பி இருந்தது. சற்றுமுன் இருந்த கொண்டாட்ட நிலை, போரை நோக்கி ஓடிக்கொண்டிருந்தது.

யாழ்ப்பாணத்தில் எனது காலை மிக இயல்பாக விடிந்தது. அப்பா காலையில் எழுந்துக்கொண்டு பரபரப்பாக எதையோ செய்துக்கொண்டிருந்தார். நான் முதல் நாளே அவரிடம் தாமதமாக வேலைக்குப் போங்க என்று கூறியிருந்தேன். நான் கூறாமல் இருந்தாலும் அவர் எங்களை வழியனுப்பாமல் வேலைக்குப் போயிருக்க மாட்டார். யாழினி, ஊறுகாய், மோர் மிளகாய், ஒடியல் கிழங்கு எனப் பொட்டலம் செய்துக்கொண்டிருந்தாள். எங்களுக்கு இடிச் சம்பலோடு, அவித்த மரவல்லிக் கிழங்குக் காலை உணவுக்கு ஒரு பக்கம் தயார் ஆகிக்கொண்டிருந்தது. அம்மம்மாவும் ஏதோ செய்துக்கொண்டிருந்தார். எல்லாம் பரபரப்பாகப் போய்க்கொண்டிருந்தது.
அம்மா  காப்பிக் கொட்டையை வறுத்துக்கொண்டிருந்தார். அதில் மல்லி, இஞ்சிக் கலந்து ஒரு வித மனம், மனதுக்கு நிம்மதியைக் கொடுத்துக்கொண்டிருந்தது. நான் அம்மாவின் பக்கத்தில் அமர்ந்து பார்த்தேன். அம்மா காப்பிக் கொட்டையை வறுப்பதற்குப் பயன்படுத்திய அகப்பைக் கொட்டாங்கட்சியால் செய்யப்பட்டது. அம்மா, ஆயாசமாக எல்லா வேலைகளையும் செய்யக்கூடியவராக இருந்தார். நான் அம்மாவோடும் அப்பாவோடும் அலவலாவ நிறைய நேரம் வாய்க்கவில்லை. என் வாழ்நாளில் ஒரு காலக்கட்டத்திற்கு மேல், என்னால் என்னைச் சார்ந்தவர்களோடு அணுகமுடியாமல் போகிறது. ஆனால், யாழினியின் அப்பா-அம்மா எனக்கு மிகமிக நெருக்கத்தில் இருந்தார்கள்.

நாங்கள் பயணப் பெட்டியோடு கிளம்புவதற்குத் தயாராகிக்கொண்டே இருந்தோம். பிரிவு நெருங்கிக்கொண்டிருந்தது என்பதை மனம் நன்றாக உணர்ந்தது. ஆனால், அதை யாருமே வெளியில் காட்டவில்லை. இயல்பாக அந்த நேரம் நகர்ந்துக்கொண்டே இருந்தது.  திரும்ப என் வாழ்நாளில் இலங்கைக்கு மீண்டும் வருவேனா? வந்தாலும் யாழ்ப்பாணம் வருவதற்கான வாய்ப்பு அமையுமா? யாழினியையும் அவள் குடும்பத்தையும் மீண்டும் சந்திப்பேனா? அப்பா-அம்மாவை அவர்கள் அன்பை மீளபெற இந்தக் காலம் எனக்கு இரண்டாவது வாய்ப்புக் கொடுக்குமா? இப்படியான கேள்விகள் என்னுள் எழுந்த வண்ணம் இருந்தது. சட்டென உணர்ச்சி வசப்படும் ஆள் இல்லை நான். என்னையே  நான் கட்டுக்குள் வைத்துக்கொண்டிருந்தேன்.

ஒரு முறை வீட்டையும், தோட்டத்தையும், கிணற்றையும் பார்க்க ஆசையாக இருந்தது. சுற்றிப்பார்க்கக் கிளம்பினேன். காக்கைகள் நிறைய வட்டமிடும் அந்த மரத்தில் வேறு ஒரு பறவை அமர்ந்திருந்தது. அது எனது சாம்பல் பறவையா? என்னைத் தேடி இங்கு வந்துவிட்டானா? ஓட்டமும் நடையுமாகச் சென்று எனது கேமராவில் படம் எடுத்தேன். அவன் என்னவன் இல்லை. ஆனால், என்னைத் தேடி வந்தவன் போலவே இருந்தது. நான் கிளம்பும் நேரத்தில் ஏன் அவன் என் கண்களில் பட வேண்டும்? சோகமான முகத்துடன் இருந்த அவன், சிதைந்த கட்டடச் சுவரை எண்ணிக்கொண்டிருக்கிறானா? அம்மம்மா எல்லாம் எடுத்து விட்டீர்களா என்று கேட்க, நான் திரும்பிப் போனேன்.

நாங்கள் பஸ்சில் பயணித்து யாழ்ப்பாணப் பட்டணத்தில் இறங்கி, அங்கிருந்து வேறொரு பஸ்சைப் பிடித்து றஞ்சி துணைவர் ரவியின் சகோதரி வீட்டுக்குப் போய் அங்கிருந்து ஒரு வாகனத்தைப் பிடித்துப் போர்ப் பூமிக்குச் செல்வதாகத் திட்டம். பஸ்சில் ஆட்கள் நிரம்பிதான் வந்தது. ஆனால், அனைத்தும் மினி பஸ் மாதிரியானவை. கட்டிபிடித்து, முத்தங்கள் பகிர்ந்துக்கொண்டு, டாட்டாக் காட்டி விடைபெற எந்தச் சர்ந்தப்பமும் கொடுக்காத பஸ் நிறுத்தங்கள்.

பஸ் நின்றதும் ஒரு நிமிஷம்கூடத் தாமதிக்காமல் ஏற, பஸ் போய்க்கொண்டே இருக்கிறது. பஸ் தாமதிக்கும் ஒவ்வொரு நேரமும், ஓட்டுநருக்குத் தண்டனை தொகை போடப்படுகிறதாம். எங்களால் தண்டனைத் தொகை போடப்பட்டதாகப் பஸ் நடத்துனர் சொன்னார். அதனால், அதற்கும் சேர்த்து நாங்கள் பணம் கொடுத்தோம்அடுத்தப் பஸ் எடுப்பதற்காக  நின்றுக்கொண்டிருந்தோம். முதல் நாள் எங்களை ஏற்றி அலைந்த ஆட்டோ ஓட்டுநர், எங்கிருந்தோ எங்களைப் பார்த்து ஓடி வந்தார். ஏன் இங்க நிக்கிறீங்க என்று ஒரு சகோதரைப்போல் கேட்டார்.. எனக்கு ஆச்சரியமாக இருந்தது. எங்களுக்காகப் பஸ் நிற்கும் இடம், எத்தனை மணிக்கு கிளம்பும் போன்ற விவரங்களை அவர் எந்தச் சிரமமும் இல்லாமல், எந்தப் பலனையும் எதிர்பார்க்காமல் ஓடி போய் அறிந்துவந்து சொன்னார்.
 
அடுத்து நாங்கள் பயணிக்க வேண்டிய பஸ்சில் ஏறினோம். றஞ்சி விளக்கமாக நாங்கள் இறங்க வேண்டிய இடத்தைச் சொன்னார். நான் ஓட்டுநர் அருகில் உள்ள இடத்தில் அமர்ந்து கொண்டேன். பஸ் கிளம்ப இன்னும் நேரம் இருந்தது. எனக்கு ஓர் ஆசையும் வந்தது. ஓட்டுநர் சீட்டில் உட்கார்ந்து வண்டி (பஸ்) ஓட்ட வேண்டும் என்றுதான். சும்மா இருப்பாளா யட்சி ?
ஓட்டுநரிடம் கேட்டேன். வண்டி ஓட்டி பார்க்கட்டா ? பாருங்களேன் என்றார். உட்கார்ந்தேன் ஓட்டுநர் சீட்டில். ஸ்தேரிங்கை பிடித்தேன். ஓட்டுநர் கேட்டார், வண்டி ஓட்டத்தெரியுமா? தெரியாது என்றேன். பிறகு, படங்கள் எடுத்துக்கொண்டேன்.

ஓட்டுநர் இளைஞர். மிகவும் பொறுப்பாக நாங்கள் இறங்க வேண்டிய இடத்தில் கேட்டு இறக்கிவிட்டார். மலேசியாவில் வண்டியை ஓட்டும்போது பெண்களைப் பார்த்தால் ஹோன் அடித்துக் கலாய்க்கும் பழக்கம் இருக்கு. அங்கு இல்லை. பொறுப்பு மட்டுமே இருந்தது.
றஞ்சி போகும் இடங்களின் பெயர்களை ஒவ்வொன்றாகச் சொல்லிகொண்டே வந்தார். பெருவாரியாகப் போரில் பாதிக்கப்பட்ட இடங்கள்தான்.

நான் கேட்டேன், ஏன் பள்ளி வாசல்களே இல்லை. கோயில்களைப் பார்க்க முடிந்த அளவுக்குப் பள்ளிவாசல்கள் இல்லையே. றஞ்சி சொன்னார், புலிகளால் 1990-களில் முஸ்லிம்களை யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றிய பிறகு, போர் முடிந்த பிறகுதான் அவர்கள் மீண்டும் கொஞ்சம் கொஞ்சமாகக் குடியேறிக் கொண்டிருக்கிறார்கள் என்று. அதற்குமேல் எனக்கே எல்லாம் புரிந்தது. ஆனால், இந்த 5 ஆண்டுகளில் அவர்களுக்கு எத்தனை பள்ளிவாசல்கள் அந்நாட்டு அரசாங்கம் கட்டி கொடுத்தது? மயானக்கொல்லைகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதா? போன்ற கேள்விகள் எழுந்த வண்ணம் இருந்தன. யாரிடமும் இதைக்குறித்து  கேட்கும் சூழல் அப்போது அமையவில்லை.


 ஜன்னல் ஓரம் காற்று என் முகத்தில் அறைந்து கொண்டே வந்தது. ஜன்னலுக்கு வெளியே நெல்வயல், தென்னை மரங்கள், மலைகள் இவற்றுக்கு மத்தியில் போரில் பாதிக்கப்பட்ட வீடுகள், கடைகள் என என்னைத் தாண்டிப் போய்க்கொண்டே இருந்தது.
நாங்கள் இறங்க வேண்டிய இடத்தில் ஓட்டுநர் இறக்கிவிட்டார். அது புலோலி பருத்திதுறை. ரவி அப்பாவின் மாமா எங்களுக்காகக் காத்துக்கொன்டிருந்தார்.
(தொடரும்)

வெள்ளி, 29 மே, 2015

மௌனம் உறைந்த தேசம் 17

சிதைந்த கட்டடச் சுவரில் சாம்பற் பறவை

தொடர் 17

எங்களின் யாழ்ப்பாண இரவு, ஒரு மாபெரும் இசைக் கச்சேரியோடு ஏற்பாடாகிக் கொண்டிருந்தது. மிக ரகசியமாக, அதுவும் ஒடியல் கூழோடு.

நான் இலங்கைக்கு வருவதற்கு முன்பே ஒடியல் குறித்துச் சிறிய அறிமுகம் இருந்தது. அதாவது ஒடியல் என்றால் என்ன? அது எப்படி இருக்கும் என்று என் பணியிடத்தில், வேலை செய்யும் இலங்கை பிரஜை ஒருவர் மிக அண்மையில் யாழ்பாணம் போய்த் திரும்பும்போது அதைக் கொண்டு வந்து எங்களுக்குக் கொடுத்தார். குச்சியைப் போன்றும் கடித்து மெல்லுவதற்குக் கடினமாக இருந்த ஒடியல், பணி இடத்தில் வேலை செய்யும் யாருக்குமே பிடிக்கவில்லை. அதோடு, மலேசியர்களுக்கு ஒடியல் என்றால் என்ன என்றும் தெரியாது.
யாழ்ப்பாணத்தில் சாம்ராஜ்யம் செய்யும் பனைமரத்தின், கிழங்கில் ஒடியல் எடுக்கிறார்கள். அதாவது பனங்கிழங்கை அவிக்காது அதிலிருந்து ஒடியல் மாவு எடுத்து, மீன், நண்டு, இறால், பலாக்கொட்டை எனப் பல ஐட்டங்களைப் போட்டு ஒடியல் கூழ் தயாரிக்கிறார்கள். அதுவும் கிராமத்துக்குக் கிராமம் இந்தக் கீழ் தயாரிப்பது மாறுபடுகிறதாகக் கூறப்பட்டாலும், யாழ்ப்பாணத் தமிழர்களுக்கு, ஒடியல் கூழ் அவர்களின் பாரம்பரிய பண்பாடோடு கலந்துவிட்ட ஒன்று.

இரவு உணவுக்கு ஒடியல் கூழ் இரவில் தயாரிக்கிறார்கள் என்று கூறியதிலிருந்தே, எனக்குத் தெரிந்துவிட்டது அதை உண்பேனா மாட்டேனா என்று. பொதுவாகவே நான் இரவு உணவு எடுத்துக்கொள்ள மாட்டேன் என்பதால் பசிக்கும் என்ற உணர்வு எழ வாய்ப்பு இல்லை. ஆனால், அம்மாவும், அம்மம்மாவும் எங்களுக்காகப் பார்த்துப் பார்த்துச் செய்திருக்கும் அந்த மண்ணுக்கே சொந்தமான பாரம்பரிய உணவைச் சுவைக்காமல் போனால் அவர்கள் சங்கடப்படுவார்களோ என்ற சங்கடம்தான் எனக்கு இருந்தது.

அம்மா ஒடியல் கூழை விறகு அடுப்பில் செய்திருந்தார். அதைத் தயாரிப்பதற்கான பொருட்களே சொல்லிவிடும் ஒடியல்கூழ் செய்வது சுலபம் இல்லை என்பதை. நாங்கள் வீட்டுக்கு போன நேரம் அம்மா சொன்னார். கூழ்த் தயாராக இருக்கிறது என்று. எனக்குப் பயமே வந்துவிட்டது. எப்படிக் கூழ் வேண்டாம் என்று சொல்லப்போகிறோம்? அல்லது குடித்துதான் பார்ப்போமா என்ற கேள்விகளை நானே கேட்டுக்கொண்டு அதற்கான விடையையும் தேடிக்கொண்டிருந்தேன்.

அதற்கு முன் அருகில் இருக்கும் றஞ்சியின் உறவினர் வீட்டுக்குச் சென்று விட்டு வந்தோம்.
வீட்டிற்கு முன் இளைஞர்ப் பட்டாளம் குழுமியிருந்தது. எல்லாம் 20-22 வயதுக்குட்பட்ட இளைஞர்கள். யார் என்று பார்ப்பதற்குள் அடையாளம் தெரிந்துவிட்டது. அன்று பெண்ணியச் சந்திப்பின் இரண்டாம் நாளில் கூத்துக் கட்டிய கலைவாணி கலைமன்றம் வடலியடைப்பு  சேர்ந்த இளைஞர்கள். அது அவர்களேதான். எல்லாரும் வந்திருந்தார்கள். எங்களைப் பார்க்கவும், எங்கள் யாழ்ப்பாணப் பயணத்தின் இறுதி இரவை மறக்கமுடியாத இரவாக மாற்றவும் வந்திருந்தார்கள்.

நிலா பாதியாகக் காய்ந்துக்கொண்டிருந்தது. காலையில் மரத்திற்கு மரம் தாவும் அணிலும், காக்கைகளும் எங்குப் போனதோ தெரியவில்லை. இளைஞர்கள் எங்களுக்குக் கச்சேரிதான் நடத்தப்போகிறார்கள் என்று பார்த்தால் தமிழர் பாரம்பரிய பழக்கத்தை அவர்கள் மறக்கவில்லை. இனிப்புப் பலகாரங்கள் வாங்கி வந்திருந்தார்கள். அதை வாஞ்சையோடு கொடுத்தார்கள்.
நாங்கள் வெளிநாடுகளிலிருந்து வந்திருக்கிறோம்; கொடுப்பதற்கு ஒன்றும் இல்லை என்ற போது இளைஞர்கள் அவர்களுக்கு உள்ளே ஸ்டைலில் அதனால் என்ன என்று பேச்சை வேறு திசைக்கு கொண்டு போனார்கள். யாழ்ப்பாண இளைஞர்களைப் பார்க்க எனக்கு ஆச்சரியம் மட்டுமல்ல அதிசயமாகவும் இருந்தது. அவர்கள் மரியாதையுடன் நடந்துக்கொள்கிறார்கள். அவர்களின் பொறுப்பு என்ன என்பது அவர்களுக்குத் தெரிகிறது. அதோடு போர் சூழல் அவர்களைப் பண்படுத்தியுள்ளது. பொதுவான விஷயங்களுக்குப் பிறகு, தொடங்கியது கச்சேரி

அதோ அந்தப் பறவைப்போல வாழ வேண்டும்என்று மேளதாளத்தோடு வாத்தியார் பாட்டுத் தொடங்கியது. அதற்குப் பிறகு, ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம் எனக் கச்சேரி நிலவுக்கே எட்டும் வரையில் ஒலித்துக்கொண்டிருந்தது. அத்தனையும் பழைய பாடல்கள்தான். இளைஞர்கள் பழைய பாடல்கள் அதுவும் தத்துவப் பாடல்களைதான் அதிகம் பாடுகின்றனர்; கேட்கின்றனர். சிறுவர்கள் மட்டுதான் கொஞ்சம் புதிய பாடல்களைக் கேட்கிறார்கள். நான் பார்த்தவரையில் அப்படிதான் அவர்களின் ரசனை இருக்கிறது. இதற்கு போர் சூழலும் ஒரு காரணமாக இருக்கலாம்.  ரஜனிகூட மேல கூட வச்சிஎன்ற பாடலை பாடினார். அத்தனை நயமாக அவர் பாடுவார் என்பதே பெரிய ஆச்சரியம். எந்த வரியும் மறக்காமல் பாடி கிரேடிட்டை அள்ளிக்கொண்டார் ரஜனி. இன்று அந்தப் பாடலை கேட்டாலும், விஜய் சேதுபதியும், அந்தப் பாடலை பாடிய பிரசன்னாவும் கற்பனைக்கு எட்டாதவரை காணாமல் போய் ரஜனி மட்டுமே சட்டென நினைவில் வருகிறார்.
பிறகு, ஆட்டம் கொண்டாட்டத்தோடும் சுராங்கனி பாட்டோடும் கச்சேரி முடிவுக்கு வந்தது. அதே கொண்டாட்டத்தோடு ஒடியல்கூழ் வந்தது. குடும்பத்தோடும், இளைஞர்களோடும் ஒடியல்கூழை ருசிக்கத் தொடங்கினார்கள். அதை அள்ளி குடிப்பதற்கு இலையையே மடித்து அழகாக வைத்திருந்தார்கள். நான் எனக்கு வேண்டாம் என்றேன். அப்பா மீண்டும் மீண்டும்ஏண்டா கொஞ்சம் சாப்பிடு டாஎன்றார். இரவு சாப்பிட மாட்டேன் அப்பா என்றேன்.

மனிதர்கள் மனதை படிப்பதற்கு றஞ்சிக்கும் யாழினிக்கும் எப்படிதான் தெரிகிறதோ? சரி கொஞ்சம் சாப்பிட்டு பார், பிடித்தால் சாப்பிடு இல்லை என்றால் பரவாயில்லை என றஞ்சிதான் கொஞ்சம் ஊட்டிவிட்டார். தொண்டையைக்கூட நனைக்க வேண்டாம் என்று என் கேடுகெட்ட ரசனை மறுத்துவிட்டது. வேண்டாம் றஞ்சி. வற்புறுத்தி சாப்பிட்டுவிட்டால், பிரச்னையாகும் என்றேன். ஆனால், வந்திருந்த எல்லாரும் ருசித்துச் சாப்பிட்டார்கள். நல்ல வேளை, ருசி பார்த்தேனே என்ற திருப்தியாவது எனக்கு மிஞ்சியது.

விடிந்தால் நாங்கள் போர் நடந்த இடங்களான வன்னி, கிளிநொச்சி, முள்ளி வாய்க்கால் உள்ளிட்ட இடங்களைப் பார்த்துக்கொண்டே கொழும்பு போய்ச் சேர்வோம் என்ற விவரத்தை றஞ்சி சொன்னார். போர் நடந்த காலக்கட்டத்தில் பத்திரிகையில் செய்திபோட தேடும்போது இந்தப் பெயர்கள் என்னை மிகவும் துன்புறுத்துபவையாக மட்டுமல்ல, பயமுறுத்துபவையாகவும் அந்த இடத்தின் பெயர்கள் இருந்தன.
கொஞ்சம் இயல்பு நிலை என்னில் தப்பி இருந்தது. சற்றுமுன் இருந்த கொண்டாட்ட நிலை இப்போ, போரை நோக்கி ஓடிக்கொண்டிருந்தது.


(தொடரும்)