திங்கள், 29 டிசம்பர், 2014

‘அழிப்பது இயல்பு, தோன்றுதல் இயற்கை'

யணங்கள் என்னில் ஏற்படுத்தும் குதூகலத்தைப்பற்றி நான் பலமுறை கூறியிருக்கிறேன். குறிப்பாக  செய்திகளைக்  கட்டிக்கொண்டு மாராட்டிக்கும்  என்னைப்போன்ற நிருபர்களுக்கு  பயணங்கள்தான் மீண்டும் புதியவையாக மீட்டெடுக்கின்றன என்று நம்புபவள் நான். இம்முறை நான் தேடலுக்காக செல்லவில்லை. இது மனமகிழ்ச்சிக்காக செல்வது. இதுபோன்ற பயணங்கள் முடிந்து வரும்போதுதான் நான் எவ்வளவு உளவியல் ரீதியில் சோர்வாக இருந்திருக்கிறேன் என்பதை உணருவேன்.

முக்கியமாக வேலை இல்லாத நேரத்திலும் வேலையைப்பற்றியே நினைத்திருக்கும் நான் இதுபோன்ற பயணங்களில்தான் நான் நானாகவே இருப்பேன்.  மொத்தமாக வேலை இடத்து சிந்தனையை முடிந்தவரை தவிர்த்துவிடுவேன். தேடல் மனமகிழ்ச்சி தரவில்லையா என்று கேட்கிறீர்களா? தேடல்கள் இல்லாத வாழ்கையில் எந்த சுவாரஸ்யமும் இல்லை என்று கூறுபவள்தான் யோகி.   எழுத்துத் துறையை சார்ந்து இயங்குபவர்கள் நன்கு உணர்வார்கள் பயணத்தின் வேறுபாட்டை.

மசூரி மாதிரி படம்
இம்முறை நான் தேடலுக்குச் செல்லாவிட்டாலும், தேடலுக்கான துவக்க புள்ளி வைக்கப்பட்டதாகவே உணர்கிறேன். அந்த துவக்கபுள்ளி வைத்த இடம் லங்காவியின் மசூரி கல்லறை.

மசூரி. மலேசியர்களுக்கு இவளின் பெயர் புதிதல்ல. இவளின் கதை மலேசியர்களின் ஆரம்ப கல்வி பாடப்புத்தகத்திலேயே உள்ளது.  ஆனால், அது ஒரு நன்னெறிக் கதையாக மட்டுமே, அதுவும் துண்டு பகுதி மட்டுமே இருக்கிறது. அதைத்தாண்டி மசூரியின் வரலாறு குறித்தும் அவர்களின் பரம்பரை குறித்தும் பெரிய அளவில் செய்திகளோ பதிவுகளோ இல்லை என்பது வருத்தமான செய்திதான்.

அவளின் கதை உண்மையாக இருக்குமா என்ற கேள்வி நான் அவளின் கல்லறைக்கு போகும்வரை இருந்தது. காரணம் மலாய் சமூகத்தில் ‘Cerita Dongeng' என்று சொல்லக்கூடிய கற்பனைக் கதைகள் அதிகமாக உள்ளது அதற்கு காரணம்.  மசூரியின் 100 சதவிகிதம் மலாய் பெண்மணி கிடையாது. ஆனால், அவள் லங்காவி தீவில் பிறந்த இஸ்லாமியப் பெண்.

மசூரியின் வரலாறு 

18-ஆம் நூற்றாண்டில் பிறந்தவள்  மசூரி. மசூரி பிந்தி பண்டாக் மாயா என்பது அவளின் முழுப் பெயர் என தெரிவிக்கப்படுகிறது. பண்டாக் மாயா அவளின் தந்தை. தாய்லாந்தவர். தாய், மாக் அண்டாம், சீனர். இவர்கள் இருவரும் தாய்லாந்தின் கம்போங் கெமாலா, புக்கேட் எனுமிடத்தைச் சேர்ந்த இஸ்லாமியர்கள். வேலைக்காக 18-ஆம் நூற்றாண்டிலேயே இவர்கள் லங்காவி தீவின் உலு மலாக்கா எனும் இடத்திற்கு குடிபெயர்ந்தனர். அங்குதான் மசூரி பிறந்தாள். அவள் பிறக்கும்போதே மற்ற குழந்தைகளைவிட அதிக தேஜஸ்சுடன் இருந்தாளாம். முதல் பார்வையிலேயே கொள்ளை கொள்ளும் அழகு அந்த குழந்தை பெற்றிருந்ததாக கூறப்படுகிறது.  10 வயது குழந்தையாக இருக்கும்போதே நற்பண்புகள் கொண்ட சிறுமியாகவும் அந்த கிராமத்தில் அனைவருக்கும் பிடித்த சிறுமியாகவும் மசூரி, மக்கள் மனதில் இடம் பிடித்தாளாம்.

இளமை பருவத்தில் மசூரி பேரழகியாக கருதப்பட்டாள். அவளின் அழகுக்கு ஈடாக மட்டுமல்ல குணத்திலும் ஈடாக அவளுக்கு மிஞ்சிய பெண் இல்லை என்றே கூறப்பட்டது. கிராமத்து மக்கள் அவள் மீது மிகுந்த அன்புகொண்டிருந்தனர். இந்தச் செய்தி டத்தோ பெகெர்மா ஜெயா காதுக்கும் எட்டியது. அவர்  கெடா சுல்தானின் பிரதிநிதியாக லங்காவியை ஆட்சி செய்தார். அவளை அடைய வேண்டும் என்று டத்தோ பெகெர்மா திட்டம் தீட்டினார்.

இந்தக் காலக்கட்டத்தில்தான்  இந்தோனேசியாவைச் சேர்ந்த டெராமாங் என்பவர் மசூரியின் பெற்றோரிடம் அடைக்கலமடைந்தார். டெராமாங் ஓர் அனாதையாவார். ஆனால், கவிதை எழுதுவதிலும் பாடுவதிலும் சிறந்தவராக இருந்தார். அவரை மசூரியின் பெற்றோர் தங்கள் வீட்டிலேயே தங்க வைத்தனர். மசூரியின் பெற்றோர் காட்டிய அரவணைப்பில் மகிழ்ந்து டெராமாங்கும் அவர்களை அம்மா-அப்பா என்றே அழைத்தாராம். மசூரிக்கு,  டெராமாங் கவிதை எழுதவும் பாடவும் கற்றுக்கொடுத்தார். இதனால், மசூரியின் பெயர் இன்னும் பிரபலமானது.

ரஷிட்
 உள்ளூரைச் சேர்ந்த போர் வீரரான வான் டெருஸ் என்பருக்கு மசூரியை பெரியோர்கள் சம்மதத்துடன் நிக்கா செய்யப்பட்டது. வான் டெருஸ் கெடா சுல்தானின் பிரதிநிதியாக இருந்த  டத்தோ பெகெர்மா ஜெயா மற்றும் வான் மஹோரா ஆகியோரின் தம்பியாவார்.

தனது கணவர் மசூரிமீது ஆசைப் படுவது  தெரிந்துக்கொண்ட டத்தோ பெகெர்மாவின் மனைவி வான் மஹூரா மசூரி மீது வஞ்சம் கொண்டார். தனது கணவர் ஆசைபடுவது  ஒரு புறம் இருக்க, தனது அழகுக்கும் குணத்துக்கும் போட்டியாக வந்தவள்தான் மசூரி என வான் மஹூரா கடும் சினம் கொண்டாள். ஊர் மக்கள் மசூரியின் புகழ் பாடுவதை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மசூரியை வஞ்சம் தீர்க்க சரியான தருணத்தை வான் மஹூரா எதிர்பார்த்து கொண்டிருந்தாள்.
இச்சமயத்தில்தான், சியாம், கெடா மாநிலத்தின் மீது போர் தொடுக்க வருவதாக தகவல் கிடைத்தது.  மசூரியின் கணவனான வான் டெருஸ் போருக்கு புறப்பட்டார். அச்சமயத்தில் தன் அன்பு மனைவியான மசூரியை வான் டெருஸ்  அவளின் பெற்றோரிடம்  விட்டுச்சென்றார்.


மசூரி மரண சம்பவத்தை விளக்கும் படம்
ஒருநாள்  டெராமாங்கும் மசூரியும் வீட்டில் பேசிக்கொண்டிருப்பதை பார்த்த வான் மஹூராவின் உதவி ஆட்கள் அதை வான் மஹூராவிடம் தெரிவித்தனர். இதுவே தக்க சமயம் என வான் மஹூராவின் குறுக்கு புத்தி திட்டம் தீட்டியது. டெராமாங்கும், மசூரிக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதாக மஹூரா குற்றம் சாட்டினாள். அவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என தனது கணவனான டத்தோ பெகெர்மாவை தூண்டிவிட்டாள். மசூரியின் குழந்தை டெராமாங்குக்குதான் பிறந்தது என வான் மஹூரா பழி சுமத்தினாள். எந்த விசாரணையுமின்றி மசூரியையும் டெராமாங்கையும் கைது செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டு மரண தண்டனை வழங்கப்பட்டது. இருவரையும் லங்காவி கடற்கரை  அருகில் இருந்த ஒரு புளியமரத்தில் கட்டி போட்டனர்.
மசூரியின் கணவன் வரும்வரை பொறுத்திருக்குமாறு கூறியும் எந்தப் பலனும் இல்லை. இறுதியில், அவளின் உயிருக்கு ஈடாக பொருள்களையும் சொத்துக்களையும் கொடுப்பதாக மசூரியின் பெற்றோர்கள் வேண்டினர். அனைத்தும் பலனற்றுப் போனது.

 ஈட்டியைக் கொண்டும் கூறிய ஆயுதங்களைக் கொண்டும் மசூரியை குத்தினார்களாம். எதுவும் அவளின் பரிசுத்த வதனத்தை துளைக்கவில்லை. அவளுக்கு எவ்விதக் காயமும் ஏற்படவில்லை. இறுதியாக சக்தி வாய்ந்த ஆயுதமே அவளின் உயிரை பறிக்கும் என்ற உண்மை தெரியவந்தது. அவளின் வீட்டிலிருந்த புனித ‘கிரிஸ்' கத்தி கொண்டு வரப்பட்டு அவளை குத்தினார்கள். அவளின் உடலிருந்து வெள்ளை ரத்தம் பெருக்கெடுத்து பூமியில் சிந்தியது. அதுவே அவள் தூய்மையானவள் என்பதை உறுதிபடுத்தியது. குற்றமிழைக்காத தன்னை நிந்தித்ததற்காக ஆத்திரமடைந்த மசூரி  இந்த லங்காவி தீவு 7 தலைமுறைக்கு நாசமாய் போகட்டும் என சாபமிட்டாளாம். டெராமாங்கும் கொல்லப்பட்டான். தன் மகளின் உயிரை மீட்க பணயம் வைத்த பொருள்களின் அருகிலேயே மசூரியின் உடலை அவளின் பெற்றோர் அடக்கம் செய்தார்களாம்.

போருக்கு போன மசூரியின் கணவன்  தனது மனைவிக்கு இழைக்கப்பட்ட அநீதியை பொருக்க முடியாமல் தன் குழந்தையை அழைத்துக்கொண்டு மசூரியின் பூர்வீகமான புக்கெட்டுக்கே போய்விட்டார். மசூரியின் மரணம் 1819-ஆம் ஆண்டு நடந்ததாக விக்கிபீடியா தகவல் கூறுகிறது.

சாப விமோர்ச்சனம்

மசூரியின் சாபம் படியே 1980-ஆம் ஆண்டு வரையில் லங்காவி தீவு எந்த மேம்பாடும் அடையமுடியவில்லை. அரசு மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் செயற்பாடுகளும் பயனின்றி போனதானக் கூறப்படுகிறது. அதாவது 1980-ஆம் ஆண்டுக்கு முன்புவரை லங்காவியில் மனிதர்களைவிட எருமை மாடுகளே அதிகம் இருந்ததாகக் கூறப்படுகிறது. அதை லங்காவி மக்களும் கூற நான் கேட்டேன்.
1980-ஆம் ஆண்டுகளில் மலேசியாவின் முதல் பிரதமரான துங்கு அப்துல் ரஹ்மான்  பல முறை லங்காவிக்கு பயணம் மேற்கொண்டு மசூரியின் கல்லறையை தேடியதாகவும், இறுதியில் மறைவான ஓர் இடத்தில்  மசூரி பெயர் பொறிக்கபட்ட அந்த கல்லறையை கண்டு பிடித்ததாகவும் கூறப்படுகிறது.

மசூரி பரம்பரையைச் சேர்ந்த 7-வது தலைமுறை குழந்தை பிறந்த பிறகே லங்காவி சாபத்திலிருந்து விமோர்சனம் அடைந்ததாக நம்பப்படுகிறது. (சிலர் அது 8-வது வாரிசு எனவும் கூறுகின்றனர்)  லங்காவி வாசிகள் இந்த சம்பவத்தை (கதையை) அதிக தீவிரமாக நம்புகின்றனர். காரணம் உண்மையில் லங்காவித் தீவு  7 தலைமுறைக்குப்  பிறகுதான்  மேம்பாடு அடையத்தொடங்கியது என்பது வரலாற்று உண்மை. லங்காவி மேம்பாட்டின் முக்கிய நபராக 4-வது பிரதமர் துன் டாக்டர் மகாதீர் இருக்கிறார். லங்காவி மகாதீரின் தீவு என்றே சிலர் வர்ணிப்பார்கள்.

நோங் மேய் என அழைக்கப்படும் வான் அய்ஷா வான் நவாவி மசூரியின் 7-ஆம் தலைமுறை பெண் வாரிசு; அவ்வப்போது லங்காவிக்கு வந்து மசூரி கல்லறையை தரிசித்துவிட்டுச் செல்கிறார். கெடா சுல்தான், அவருக்கு  குடியுரிமை வழங்கி தங்குவதற்கான இடவசதியையும் செய்து தருவதாக சலுகைகள் வழங்கியும்  அதை அவர் மறுத்துவிட்டாராம்.

எங்களின் சுற்றுலா வழிகாட்டி ரஷிட் சொன்னார், 7-வது தலைமுறை வாரிசே நமக்கு பேரழிகியாக தெரியும் போது மசூரியின் அழகை வார்த்தைகளால் வர்ணிக்க முடியவில்லைதான். வான் அய்ஷா லங்காவிக்கு குடி பெயராமல் இருப்பதுவே நல்லது.  மேலுமொரு சாபத்தை இந்த லங்காவி தாங்காது. வான் அய்ஷா வராமல்  இருப்பதுவே நல்லது என்று மீண்டும் மீண்டும் கூறினார்.

மசூரியின் கல்லறை இருக்கும் இடத்தில் தினமும் இசைக்கருவிகளை பெண்கள் இசைக்கிறார்கள். குழுவாக பெண்கள் நடனம் ஆடுகிறார்கள். அவளின் கல்லறையில் விட்டு விட்டு ஒரு சுகந்த நறுமணம் வருவதாக சுற்றுப்பயணிகள் கூறுகிறார்கள். (அந்த இடத்தின் பராமரிப்பாளர்களும் பலபேர் இப்படி கூறுவதாகக் கூறினர். எனக்கு எந்த நறுமணமும் வரவில்லை என்பது சத்தியம்) கல்லரையில் 200 ஆண்டுகளுக்கும் மேலாக உறங்கிக்கொண்டிருக்கும் மசூரியின் ஆத்மாவை இன்னும் சாந்தி அடையச் செய்யும் காட்சியாகவே அங்கு நடக்கும் அந்த அமைதியான கேளிக்கைகள்  தெரிந்தன.


புனித கிணறு
மசூரி, மலேசியப் பெண்களுக்கு அதிகம் பிடித்தவள். அவள் தன் அழகைக்கொண்டு  நிலைத்தவள் அல்ல. தனது சாபத்தின் மூலமாக தன் பலத்தையும் பரிசுத்தத்தையும் நிருபித்தவள்.  அவளின் கல்லறைக்கு அருகில் இருக்கும் கிணற்று நீரில் அங்கு வருபவர்கள் முகம் கழுவிக்கொள்கிறார்கள். அதற்கான உண்மைக்காரணம் தெரியாவிட்டாலும், அந்த நீரில் முகம் கழுவிக்கொண்டால் நல்ல சகுனம் கிட்டும் எனவும் முகத்திற்கு புதுப் பொழிவு கிடைக்கும் எனவும் அது மசூரியின் ஆசீர்வாதம் எனவும் கூறுகிறார்கள். (அந்த கிணற்று நீரில்தான் மசூரி தினமும் குளித்து துணி துவைத்தாளாம். மேலும், லங்காவியிலுள்ள மற்ற தண்ணீரை காட்டிலும் இது அதிகமாக குளிர்ந்து இருக்குமாம். எம்மாதிரியான வரட்சியிலும் இந்த கிணற்று நீர் வர்றாதாம். இது அங்கிருந்த குறிப்பில் பெறப்பட்ட தகவல்)
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அந்த குளத்து நீரில் சுமார் ஒரு வாரகாலத்திற்கு மல்லிகைப் பூ மணம் இருந்தது என ரஷிட் கூறினார். இந்த மசூரி கல்லறை இருக்கும் இடத்தில் அதிசயம் நடப்பது உண்மை என ரஷிட் கூறினார்.  நானும் அந்த நீரில் முகம் கழுவிக்கொண்டேன்.  எனக்கு ஆத்மாநாமின் ‘அழிவு' என்ற கவிதைதான் ஞாபகத்திற்கு வந்தது ...

‘என்னை அழித்தாலும்
என்னை அழிக்க இயலாது
அழிப்பது இயல்பு
தோன்றுதல் இயற்கை'

குறிப்பு:

கல்லறை விளக்கம்
போருக்கு போன மசூரியின் கணவன் வான் டெருஸ் போரில் வெற்றிபெற முடியாமலேயே தப்பித்து வந்தார். சியாம் போர்வீரர்களுக்கு பயந்து தலைமறைவான டத்தோ பெகெர்மா ஜெயாவை சியாம் போர்வீரர்கள் கண்டுபிடித்துக் கொன்றனர். வான் மஹூராவும் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.  சியாம் போர் வீரர்கள் லங்காவியை தாக்கி நாசம் செய்ததாக விக்கிபீடியா தகவல் கூறினாலும்  அதற்கான தரவோ அல்லது ஆதாரமோ எங்கும் ஆவணம் செய்யப்படவில்லை. பின்னாளில் டத்தோ பெகெர்மா ஜெயாவின் வாரிசான வான் முகமட் அலிக்கு, அவரின் தந்தையின் பதவியே கொடுக்கப்பட்டதாம். ஆனால், அவரால் லங்காவியின் வீழ்ச்சியை தடுக்கமுடியவில்லை எனவும் கூறப்படுகிறது.

உண்மையில், மசூரி கொல்லப்பட்டதும் அவள் சாபமிட்டதும் உண்மையாக இருக்கலாம். ஆனால், அந்தச் சம்பவத்தை பின்னி பல கதைகள் உருவாகிவிட்டன. ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு விதமாக தொடங்கி நகர்ந்து வந்தாலும் முடிவு ஒன்றாகதான் உள்ளது. அதில் எந்தக் கதை அசல் என்பது கூறுவது கடற்மணலை எண்ணுவதற்கு சமம். மசூரியை இந்தியப் பெண் என நம்மவர் கூறுவது இன்னொரு காமெடி.

மசூரியின் கதையை ‘Sumpahan Mahsuri'  என்ற பெயரில் இயக்குநர் ஜாமில் சூலோங் கூட்டணியால் படமாக்கப்பட்டது.  துங்குவே கதை எழுதி அந்த படத்தை தயாரித்தார் என்பது குறிப்பிடதக்கது. ஆனால், 1956-ஆம் ஆண்டு முதன் முதலாக மசூரி என்ற பெயரில் ஒரு படம் வெளிவந்திருப்பதாக தகவல் கூறினாலும் அதற்கான  பதிவுகள் கிடைக்கவில்லை.




மசூரி மாதிரி படத்தை நினைவுச் சின்னமாக வான் அய்ஷாவின் கொடுக்கப்பட்டபோது

வான் அய்ஷா தனது 14-வது வயதில்

















இளைமையில்  வான் அய்ஷா









வான் அய்ஷா தனது குடும்பத்தாருடன்







இயக்குநர் ஜாமில் சூலோங்

சனி, 20 டிசம்பர், 2014

பிரிக்பீல்ட்ஸ் ‘லிட்டல் இந்தியா' தானா? 4

லிட்டல் இந்தியா எனும் ‘செட்' கலைக்கப்படும்
100 குவார்ட்டஸ் 

கடந்த தேடலில்...
பிரிக்பீல்ட்ஸில் இன்னும் மிஞ்சப்போவது என்ன?  விவேகானந்தா ஆசிரமத்திற்கு எதிராக எத்தனை பேர் போர் கொடிபிடித்தாலும், அது சொந்த நிலத்தில் உரிமையாளர் பராமரிப்பில் இருக்கிறது. பொது சொத்தாக இருப்பின் கதையே வேறாக இருந்திருக்கும். சட்டபடி நிலத்தின் உரிமையாளர் எடுக்கும் முடிவே நிரந்தரமாகும். இந்தப் பிரச்னையில் 100 குவார்ட்டஸ் வீடமைப்புப் பகுதியின் நிலை குறித்து யாரும் கண்டுகொள்ளவில்லை. 

இனி

இனியும் இது குறித்துப் பேசுவதால் எந்தப் பிரயோஜனமும் இல்லை என்றுதான் தோன்றுகிறது. காரணம் நான் எனது நிருபர் அனுபவத்தில் பல  மக்கள் பிரச்னைகளைப் பார்த்திருக்கிறேன். குறிப்பாக இந்தியர்கள் அதிகமாக வாழ்ந்த செந்தூல் ரயில்வே வீடமைப்புப் பகுதி, புத்ரா ஜெயா நிலப்பகுதி, டெங்கில் தாமான் பெர்மாத்தா வீட்டுப்பிரச்னை போன்றவைகளையே உதாரணத்தில் கொள்ளலாம். எத்தனை எதிர்ப்புகளையும், போராட்டங்களையும் எதிர்கொண்டாலும் அரசுக்குத் தேவை எனும்போது அழிவு என்னவோ நிச்சயம்தான்.

இன்று அழகுபடுத்தபட்ட ‘லிட்டல் இந்தியாவில்' கொஞ்சம் கொஞ்சமாக இந்தியர்களின் நடமாட்டம் குறைந்து பிற இனத்தவர்கள் மற்றும் அந்நிய நாட்டவர்களின் நடமாட்டம் அதிகரித்து வருவதை பார்க்கமுடிகிறது. லிட்டல் இந்தியா உருவானால் இந்தியர்களுக்கு வியாபார வாய்ப்புகள் அதிகரிக்கும் என்றும், அவர்கள் பொருளாதார ரீதியில் நன்மையடைவார்கள் என்றும் கூறப்பட்டது. உண்மைதான் பிரிக்பீல்ட்ஸில் மது கடை வியாபாரம் கொடிகட்டி பறக்கிறது. இந்தியர்கள்தான் அதிகமான மதுகடைக்கு அங்கு உரிமையாளராக இருக்கிறார்கள். வாடிக்கையாளர்களை குறித்து சொல்லத்தேவையில்லை.

நமது தமிழ்மொழியில் இருக்கும் ‘குடியும் குடித்தனமும்' என்ற வார்த்தைக்கான அர்த்தத்தை அங்கு பார்க்கலாம் தாராளமாக. அதோடு ‘பார்'களின் எண்ணிக்கையும் சமீபகாலமாக அதிகரித்திருக்கின்றன. கடந்த வாரங்களில் பிரிக்பீல்ட்ஸின் நுண் கலை கோயிலில் மாபெரும் கலை திருவிழா 4 நாள்களுக்கு நடந்தது. நம் இந்திய மைந்தர்கள் மது கடையில் காட்டிய ஆர்வத்தை, கொஞ்சம் கலையிலும் காட்டியிருக்கலாம். என்ன செய்வது? (இது குறித்து வேறொரு பதிவில் பேசுவதே சிறப்பாக இருக்கும் )
பிரிக்பீல்ட்ஸ் வரலாறு குறித்து பாலன் மோசஸ் என்பவர் 2007-ஆம் ஆண்டு ஒரு ஆங்கிலப் புத்தகத்தை எழுதியுள்ளார். பிரிக்பீல்ட்ஸில் பிறந்தவரான பாலன் மோசஸ் அந்தப்புத்தகத்தில் அவர் அனுபவங்களையும், சில பதிவுகளையும் செய்துள்ளார். அந்தப் புத்தகம் ஆய்வுப்பூர்வமான தகவலைக் கொண்டிருக்காவிட்டாலும், பழைய  பிரிக்பீல்ட்ஸ் கதையைப் புகைப்படங்களோடு பேசவே செய்கிறது. மேலும், பிரிக்பீல்ட்ஸ் குறித்து ஆய்வில் ஈடுபடுபவர்களுக்கும் அந்தப் புத்தகம் கண்டிப்பாக உதவியாக இருக்கும்.
தமிழ் நாட்டுச் சினிமாவில்  பல புராதன திரைப்படங்கள் ஏவிஎம் ஸ்டூடியோவில்தான் படமாக்கப்பட்டுள்ளது. அதுவும் கலை இயக்குநர் தோட்டா தரணி ‘செட்' போட்டால் அது செட் என்று கண்டு பிடிக்கவே ரொம்ப கஷ்டம் என்று கூறுவார்கள். படம் பார்ப்பவர்களுக்கும் ‘செட்' என்றே தெரியாத பிம்பத்தை தோட்டா தரணியால் ஏற்படுத்த முடியும்.
என்னைப் பொறுத்தவரையில் பிரிக்பீல்ட்ஸ் எனும் ‘லிட்டல் இந்தியா' டத்தோ சரவணன் போட்ட மாபெரும் ‘செட்'-ஆகும். அந்த செட்டிற்குள் நாம் நடிகர்கள் என்றே தெரியாமல் மிக அழகாக நடித்துக்கொண்டிருக்கிறோம். சொல்லப்போனால் நடிப்பதற்கு தள்ளவிடப்பட்டிருக்கிறோம்.  ஒருநாள்  படம் முடிந்து ‘செட்' கலைக்கப்படும்போது, ‘லிட்டல் இந்தியா' எனும் மாயமும் கலைக்கப்படும். நமது வேஷமும் உரிக்கப்படும். அப்போது  பிரிக்பீல்ட்ஸில் நமது அடையாளத்தைத் தொலைத்த  உண்மையைத் தாமதமாகவே உணர்ந்திருப்போம்.
குறிப்பு: நான் இந்தத் தொடரை எழுதத் தொடங்கும்போது விவேகானந்தா ஆசிரமப் பிரச்னையிலிருந்துதான் தொடங்கினேன். அந்த முதல் தொடரில், உலகம் முழுக்கப் பயணம் செய்த சுவாமி விவேகானந்தா, 1893-ஆம் ஆண்டு மலாயாவுக்கு வந்தார் என்றும், அவர் வருகையின் நினைவாக, அதைப் பதிவு செய்யும் பொருட்டு  மலாயாவைச் சேர்ந்த சிலோன் தமிழர்கள் அழகிய விவேகானந்தரின் வெண்கலத்தால் ஆன சிலையை நிறுவினர் என்றும் கூறியிருந்தேன்.
“Messiah of Resurgent india (2003) எனும் நூலில் 1893-ஆம் ஆண்டு தொடங்கி ஜப்பான், சீனா, கனடா மற்றும் அமெரிக்கா போன்ற தேசங்களில் அவர் பயணம் செய்ததாகவும், இந்துமத உரை நிகழ்த்தியதாகவும் பதிவு இருக்கிறது. ஆனால், நமது நாட்டிற்கு (மலேசியாவிற்கு) சுவாமி விவேகானந்தா வந்ததற்கான ஆதாரங்கள் இல்லை. வாய்மொழியாகப் பலரும் பல்வேறு தகவல்களை இங்கு கூறிக்கொண்டிருக்கின்றனர். எனவே, அதில் எது நம்பகத்தன்மையானது என்பதை  ஊடகங்களில் பதிவு செய்பவர்கள் கவனிக்க வேண்டியுள்ளது. சொல்லப்படும் கருத்தை அப்படியே நம்பி எழுதுவதால் மக்கள் குழப்பம் அடையலாம். மேலும் இக்கட்டுரை எழுதுவதில் உங்கள் நோக்கம் எதுவாயினும், வரலாற்று கருத்தை எந்நோக்கத்தில் எழுதினாலும் அது குறைந்த பட்ச ஆதாரங்களைக்கொண்டிருக்க வேண்டும் என்பதே நமது அவா”  என்று வல்லினம் குழுவினர் வரலாறு குறித்து எழுதுவதின் நம்பகத்தன்மையை எனக்கு சுட்டிக்காட்டினர். காரணம், சுவாமி விவேகானந்தரின் அதிகாரப்பூர்வ இணையத்தளமான
<http://vivekananda.gujarat.gov.in/international-visit.aspx>  என்ற அகப்பக்கத்தில் அவர் மலாயாவுக்கு வந்ததற்கான எந்தப் பதிவும் இல்லாதபோது எதன் அடிப்படையில் அதை எழுதினீர்கள் என்பது நியாயமான கேள்விதான். அதற்கு ஏற்றார்போல் வாய்வழி மூலமே அவர் வருகையை இங்கு பேசுகிறார்களே தவிர உண்மையில் எந்த ஆதாரமும் இல்லை என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். இந்நிலையில் சுவாமி விவேகானந்தரோ அல்லது மற்ற மற்ற உலக புகழ்வாய்ந்த தலைவர்களோ நமது நாட்டிற்கு வந்தார்கள் என்பதை நிறுபிக்க ஆய்வுப்பூர்வமான ஆதாரங்களை ஆவணப் படுத்துவதின் முக்கியத்துவத்தை வாசகர்களும் எழுத்தாளர்களும், குறிப்பாக தலைவர்களும் உணர வேண்டும் என்பது எனது வேண்டுகோளாகும்.

பின்னர் அப்பறவை மீண்டும் திரும்பாது...

'காணாமல்போனவர்கள்
வீடு திரும்புகிறார்கள்
பிணங்களாய்

பேச மறுக்கிறார்கள்
எழ அடம்பிடிக்கிறார்கள்
தூங்கியே கிடக்கிறார்கள்
அப்பா அம்மா
சொந்தம், நட்பு
எல்லாரும் வந்தும்
நகர்வதாய் இல்லை

இறுதியில் அனுப்பி
வைக்கின்றோம்
வந்த இடத்தை நோக்கியே!

மற்றொருவர்
காணாமல்போகும்வரை
அவரவர் வழியில்
அவரவர் பயணம்'


தர்மராஜனுக்கு பா.அ.சிவம் எழுதிய கவிதை இது. பா.அ.சிவம் எங்களின் குடும்ப நண்பர். என்னைவிடவும், எனது துணைவர் ஓவியர் சந்துருவிடம் இன்னும் நெருக்கமாக நட்புக் கொண்டிருந்தார். நான் பத்திரிகைத் துறைக்கு வந்த பிறகு மனித வள அமைச்சரின் நிகழ்வுகளைக் குறித்து என்னிடம் தெரியப்படுத்தக் கேட்டிருந்தேன். சிவம் அவ்வமைச்சிக்கு பத்திரிக்கை செயலாளராக இருந்தார். அவரும் குறுஞ்செய்தி வழி தெரியப்படுத்துவார். மாதத்துக்கு ஒரு முறையாவது நாங்கள் சந்தித்துக்கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது.
ஆனால், அனைத்தும் 28 பிப்ரவரியோடு முடிவடைந்துவிட்டது.
 அன்று முழுதும் சிவத்தின் இறப்புச் செய்தி பற்றிய விவரங்கள் எல்லா ஊடகங்களிலும் பிரசுரிக்கப்பட்டன. என் நண்பர் ஒருவர் கூறினார். சிவத்தைப் பற்றி ஏதேனும் சில பதிவைப் பத்திரிகையில் போடுங்கள். அதுதான் அவருக்குச் செய்யும் மரியாதை என்று. அன்றைய நாளில் சிவத்தின் பெயரை எழுதுவதற்குக் கூட திராணியற்றுக் கிடந்தேன் நான். எப்படி அவரின் பதிவை எழுதுவேன்? சிவத்தின் பெயரை உச்சரிக்க மட்டுமே என்னால் முடிந்தது என்பது நண்பனுக்குத் தெரிய வாய்ப்பில்லை. இன்றோடு 10 நாள்களாகிவிட்டன. சிலரின் ஞாபகத்திலிருந்து சிவம் மறக்கப்பட்டு வரலாம். சிலர் இன்னமும் ஞாபகப்படுத்திக்கொண்டு முகநூலில் ஏதாவது ஒரு பதிவு போடுகிறார்கள். சிலர் அவரின் தொலைபேசி எண்ணை அழித்திருக்கக்கூடும். இன்னும் சிலர் அவரின் நினைவலைகளிலிருந்து மீளாமல் இருக்கக்கூடும்.
சிவத்தின்மீது இத்தனைபேர் அன்பும், மரியாதையும் வைத்திருப்பது அவருக்கே கூட தெரியாமல் இருக்கக்கூடும். விடுபட்டுப்போனது வார்த்தைகள் மட்டுதான்.
நான் தலைநகருக்கு வந்த பிறகு, பத்திரிகையில் எழுத ஆரம்பித்த காலகட்டத்தில் பல எழுத்தாளர்கள் அறிமுகமானார்கள். அதில் சிலர், என் நெருங்கிய நண்பர்களானார்கள். அவர்கள் அனைவரையும் நான் எங்கு எப்போது முதன் முதலில் பார்த்தேன் என்பதை ஒருவாறு யூகித்துக் கூறிவிட முடியும். ஆனால், தொடர்ந்து என் நினைவை அலசிக்கொண்டிருக்கிறேன் சிவத்தை எங்கு முதலில் சந்தித்தேன் என்பதை என்னால் நினைவுபடுத்தவே முடியவில்லை. ஆனால், சிவத்தைவிட அவரின் கவிதைகள்தான் எனக்கு முதலில் அறிமுகமாகியிருந்தன. ‘நயனம்', ‘தென்றல்', ‘செம்பருத்தி' போன்ற இதழ்களில் அவரின் கவிதைகளை வாசித்திருக்கிறேன்.
அவரது முதல் கவிதைத் தொகுப்பு 2002-ஆம் ஆண்டு வெளிவந்தது. ‘உனது பெயர் நான்' என்ற வித்தியாசமான தலைப்பைக் கொண்ட கவிதைப் புத்தகம் அது. சந்துருதான் முழுப்புத்தகத்தையும் வடிவமைத்தார்.  அவரின் சொந்தப் பதிப்பகமான கடவுள் பதிப்பகம் அதை வெளியீடு செய்திருந்தது. அதிலுள்ள பல கவிதைகள் இழப்பைக் குறித்தும், மரணத்தைக் குறித்தும், துயரத்தைக் குறித்து மட்டுமே இருந்தன. அதில் ஒரு கவிதை....

பாப்பாத்தி

வீட்டைச் சுற்றிச் சுற்றி
வந்துகொண்டிருந்தது
ஒரு வண்ணாத்துப்பூச்சி
தலையில் அமர்ந்தது முதலில்
தோளில் இறங்கியது பின்னால்
விரட்ட முயன்றேன்
மனம் இல்லை
எனினும்,
கன்னத்தை வருடியது
நெற்றியில் அமர்ந்துகொண்டு
எழவில்லை வெகுநேரம்!
விட்டு விட்டேன் அதன் போக்கில்
வேறு யார் செய்வார் இதையெல்லாம்
அம்மாவின் நினைவு நாளில்....!

என்று முடியும் அக்கவிதை துயரம் தோய்ந்த இக்கவிதை மாதிரி இன்னும், பல கவிதைகள் அவர் தொகுப்பில் உள்ளன. வல்லினம் பதிப்பகத்தில் 2009-ஆம் ஆண்டு வெளிவந்த ‘பின்னர் அப்பறவை மிண்டும் திரும்பியது' என்று மொழிபெயர்ப்புக் கவிதைப் புத்தகத்தில், ‘‘என்னுடைய ரசனை சார்ந்தே எனது உலகின் காட்சிகளைப் போலவே வலியை, வெறுமையை, தனிமையை, துரோகத்தை, இயலாமையைப் பதிவுசெய்திருக்கிற கவிதைகளே சட்டென அமர்கின்றன மனதில். எனது கவிதை உலகிலும் கிட்டத்தட்ட ஒரே வகைக் காட்சிகளே அல்லது பார்த்த முகங்களே இருப்பதை உணரலாம்.
சில வேளைகளில் சலிப்பை அல்லது அலட்சியத்தைத் தந்தாலும், பல வேளைகளில் அவற்றை மீண்டும் மீண்டும் இயற்றுவதில் எனக்குக் கொண்டாட்டமே'' என்று அப்புத்தகத்தின் முன்னுரையில் சிவம் எழுதியுள்ளார். அந்தப் புத்தகத்தில் ‘உண்மை' என்ற தலைப்புடைய ஒரு கவிதை இப்படி எழுதப்பட்டிருக்கும்....

'உண்மையான ஒவ்வொன்றும்
எவ்வளவு அழித்தாலும்
நிச்சயம் நிலைத்திருக்கும்
உரம் போடாமலேயே
நிச்சயம் பூப்பூக்கும்
காற்று இல்லாமலேயே
நிச்சயம் பொழிவாக இருக்கும்....!'

அதுதான் சிவம் என்று எனக்குத் தோன்றுகிறது.  அவரின் கவிதைகளிலுள்ள நிலைகள் அவருடன் நெருங்கிப் பழகியவர்களுக்கு நன்கு தெரிந்திருக்கும். அதைத் தொடர்ந்து சிவம், ‘மலேசிய அரசவமைப்புச் சட்டம்' என்ற புத்தகத்தைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியீடு செய்திருந்தார்.
சிவம், ‘மௌனம்' என்ற சிற்றிதழில் ஆரம்பகாலத்திலிருந்து கவிதைகளையும், கவிதை குறித்த கட்டுரைகளையும் எழுதி வந்தார். மலேசிய நவீன இலக்கியப் படைப்பாளர்கள் சொர்ப்பமாக இருக்கும் நிலையில், சிவத்துடைய எழுத்து மிகவும் எளிமை வாய்ந்தது; வீரியம் மிக்கது; தனக்கான தனி அடையாளத்தை அது ஏற்படுத்திக்கொண்டது.

அழகான அன்பான உண்மையான ஒரு நண்பனுக்கு (மனிதருக்கு) கண்ணீரை மட்டுமே அஞ்சலியாக என்னால் செலுத்த முடிகிறது. தனது 4-வது கவிதைப் புத்தகத்தை வெளியீடு செய்வதற்கு சிவம் முயற்சி மேற்கொண்டிருந்தார். அதற்கான ஆரம்பகட்ட வேலையிலும் அவர் ஈடுபட்டிருந்தார். ஆனால், அது முடியும் முன்பே அவரின் வாழ்க்கை அத்தியாயம் நிறைவுபெறாமலேயே முடிந்துவிட்டது. மலேசிய இலக்கிய வரலாற்றுக்கு இந்த நூற்றாண்டில் ஏற்பட்ட மிகப்பெரிய சோகமும், இழப்பும் இதுவே என்று நான் கூறுவேன். சிவத்தின் புத்தகங்களைப் பலர் இரவல் கேட்கிறார்கள். ஏற்கெனவே அவருடைய ‘உனது பெயர் நான்' என்ற புத்தகத்தை ஒரு நண்பனுக்கு இரவல் கொடுத்து இறுதிவரை என் கரம் வந்து சேரவில்லை. அதனால், இருக்கும் புத்தகத்தை இரவல் கொடுக்கலாமா வேண்டாமா என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன். அவரின் புத்தகத்தின் பக்கங்கள் என்னைப் பார்த்து படபடத்துக்கொண்டிருக்கின்றன.


'பிரியத்தின் நினைவாக
நீயளித்த
ஒற்றை ரோஜாவில்
காய்ந்தபோதும்....
உதிராதிருக்கிறது
அன்பின் இதழ்கள்!

- பா.அ.சிவம்.

(10 மார்ச் 2013)



குறிப்பு: சிவம் விருப்பப்பட்ட அவருடைய கவிதை புத்தகம் இன்னும் அச்சிடப்படவில்லை என்பது பெரிய சோகம். அவரின் மடிக்கணினி களவு போனபோது சந்துருவிடம் பக்கம் வடிவமைப்புக்கு கொடுத்த கவிதைகள் மட்டுமே இருந்தன. புதிய கவிதைகள் மற்றும் அச்சில் ஏறாத அவரின் படைப்புகள் அனைத்தும் அந்த மடிக்கணினியோடே போய்விட்டன. சிவத்துடன் கொண்டிருந்த நட்புக்கு உண்மையாக அவருடைய கவிதைகள், கவிதை விமர்சனங்கள், நேர்காணல்கள் என அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு தொகுப்பை பதிப்பிக்க ‘வல்லினம்' குழு எண்ணம் கொண்டிருந்தோம். சில தவிர்க்கமுடியாத காரணங்களால் அது நிலுவையில் உள்ளது.
(20.12.2014)

புதன், 17 டிசம்பர், 2014

இன்னும் பார்க்கவில்லை



இன்றுதான் நான்
வேஷம் தரிக்க கற்றுக்கொண்டேன்
முதலில் நாய் வேஷம்
 போடப்பட்டது...

தெருவில் இருக்கும்
மரத்தூண்களில்
ஒரு காலைத் தூக்கி
சிறுநீர் கழிக்க
திராணியிருந்த எனக்கு
வவ் வவ்வென்று குரைக்க தெரியவில்லை

நாய் வேஷம் கலைக்கப்பட்டு
பூனை வேஷம் போடப்பட்டது
பூனையைப்போல்
பதுங்கத் தெரிந்த எனக்கு
பூனையின் திருட்டுப்புத்தி
கொஞ்சம்கூட பொருந்தாமல்
போனது...
இறுதியில் இதுதான்
பொருத்தம் என்று
குரங்கு வேஷம் போட்டுவிட்டார்கள்

அப்பாவி பார்வையோடு
நாலா பக்கமும் தாவிக் கொண்டிருந்தேன்
உடல் முழுதையும்
 சொறிந்து கொள்கிறேன்
வ்வா...வ்வா... என்று
குரல் எழுப்புகிறேன்
ஆடரா ராமா... ஆடரா... ராமா
என்று கையில்
கோலோடு என்னை
ஆட்டி வைப்பவன்
இன்னும் பார்க்கவில்லை
என் குரங்குச் சேட்டையை

ஞாயிறு, 14 டிசம்பர், 2014

பிரிக்பீல்ட்ஸ் ‘லிட்டல் இந்தியா' தானா? 3


கேஎல் செண்ரல் 
பிரிக்பீல்ட்ஸில் இன்னும் மிஞ்சப்போவது என்ன?

கடந்த தேடலில்...
என்னுடைய ஆதங்கம் இந்த லிட்டல் இந்தியாவில் ஏன் இந்தியர்கள் வாழ்ந்த பல இடங்கள் அழிவை நோக்குகிறது என்பதுதான்.  உதாரணமாக 100 ஆண்டுகள் வரலாற்றை எட்டிப்பிடிக்கப்போகும்  100 குவார்ட்டர்ஸ்  வீடுகளில் மிஞ்சி இருக்கும் சில வீடுகளும் இடிப்பதற்குத் தயார் நிலையில் இருக்கின்றன. இந்தியர்கள் வாழ்ந்த அந்த வீடுகளுக்கு மேல்தான் கேஎல்  செண்ட்ரலும் கட்டப்பட்டிருக்கிறது. 
இனி... 

1915-ஆம் ஆண்டு  கட்டப்பட்டதாக நம்பப்படும் அந்த வீடமைப்புப் பகுதிகளில் பிரிட்டிஷ் காலத்தில் பிரிட்டிஷ் அதிகாரிகளால் செயல்பட்டு வந்த ‘மலாயன் ரயில்வே' ஊழியர்கள், டெலிகோம் ஊழியர்கள் உட்பட மற்ற துறைகளில் வேலை செய்த அரசாங்க ஊழியர்களுக்காகக் கட்டப்பட்டதாகவும். பிரிக்பீல்ட்ஸின் பிரதான சாலைகளான ஜாலான் சான் அ தோங், லோரோங் சா அ தோங் மற்றும் ஜாலான் ரோஸாரியோ போன்ற சாலைகளின் அந்த வீடமைப்பு அமைக்கப்பட்டது. வீட்டின் வெளிப்புறம், உட்புறமும்  பிரிட்டிஷ் நாட்டு வடிவமைப்பைக் கொண்டிருக்கும் அந்த வீடுகள், தரமான பொருள்களைக் கொண்டு கட்டப்பட்டதால் பார்ப்பதற்கு மட்டுமல்ல வாழ்வதற்கும் வசதியானவையாகக் கருதப்பட்ட அந்த வீடுகளில் சிலோனிஸ்காரர்களும், தமிழர்களும், சீனர்களும் அதிகமாக வாழ்ந்துவந்தனர்.
பிரிக்பீல்ட்ஸ்  வட்டாராம் மேம்பாடு காணத்தொடங்கியவுடன் 100 குவார்ட்டர்ஸ் அழிவை நோக்கத்தொடங்கியது. தொடக்கத்தில் பிரிட்டிஷ்காரர்களால் கட்டப்பட்டது எனவும், இதற்கு வரலாறு உண்டு எனவும், பாரம்பரிய (Heritage) இடம் என்றும் அடையாளப்படுத்தப்பட்டதோடு சுற்றுலாப்பயணிகளிடத்திலும் இந்த 100 குவார்ட்டர்ஸ் ஒரு சுற்றுலாத்தளமாகக் காட்டப்பட்டது. அதன் பிறகு அந்நிலத்தின் தேவைகருதி மேம்பாட்டுப்பணிக்காக மக்கள், அங்கிருந்தவர்களை அதைவிடவும் வசதியான வீட்டிற்கு இடமாற்றம் செய்தனர். அவர்களை அருகில் இருக்கும் இடத்திலேயே மாற்றம் செய்ததால் பெரிய அளவில் எந்த எதிர்ப்பும் இல்லாமல் வேலை முடிந்தது. ஆனால், அந்த வீடுகளில் இருந்த வரலாறும், பாரம்பரியமும் வேறொரு புதிய வரலாற்றுக்குத் தயாராகிக்கொண்டன.
அண்மையில் நான் நேர்காணல் கண்ட ஹிண்ராஃப் தலைவர் பி.உதயகுமார், இந்த 100 குவார்ட்டர்ஸ் குறித்த ஒரு தகவலைச் சொன்னார். அதாவது லிட்டல் இந்தியாவில் இந்தியர்களின் சரித்திரம் நிலைத்திருக்க வேண்டும் என்றால் ‘இந்தியர் செண்ரல் மார்க்கெட்'-டாக அது மாற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். “குறிப்பாக சுவாமி விவேகானந்தா ஆசிரமத்துக்கு அருகாமையில் எஞ்சி இருக்கும் 100 குவார்ட்டர்ஸ் வீடமைப்புப் பகுதியின் சாலையில் ‘இந்தியர் செண்ரல் மார்க்கெட்' அமைப்பது மிகப் பொருத்தமாக இருக்கும். தலைநகர் பாசார் செனியில் ‘செண்ரல் மார்க்கெட்' பிரபலமாக உள்ளது போல் இந்தியர்களின் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் பொருள்களை விற்பனைக்கு வைத்து ஒரு சந்தை அமைக்கப்பட வேண்டும். அப்படி நடந்தது என்றால் சிங்கப்பூரிலும், லண்டனிலும் இருக்கும் லிட்டல் இந்தியா மாதிரி இதற்கும் உலகத்தர அந்தஸ்து கிடைக்கும். அதைவிடவும் லிட்டல் இந்தியா தொடங்கப்பட்டதற்கான காரணத்திற்கும் ஓர் அர்த்தம் இருக்கும்” என்று அவர் கேட்டுக்கொண்டார்.

100 குவார்ட்டர்ஸ் 
'KL செண்ரல் மார்க்கெட்'
இந்தத் தகவலை பி.உதயகுமார் புதிதாக ஒன்றும்கூறிவிடவில்லை. 2010-ஆம் ஆண்டே ஒரு முறை கடிதம் வாயிலாக அந்த ஆலோசனையை பிரதமரிடமும் தெரிவித்திருக்கிறார். அந்தக் கடிதத்தில் மேற்கூறிய தகவலுடன்  100 குவார்ட்டர்ஸ் வீடமைப்புப் பகுதியில்  ‘இந்தியர் செண்ரல் மார்க்கெட்' உருவானால் லிட்டல் இந்தியா முழுமை பெறுவது மட்டுமல்லாமல் சுற்றுலாத்தளமாகவும் மாறும் எனவும் பி.உதயகுமார் குறிப்பிட்டிருக்கிறார்.
ஆனால், எதுக்குமே எந்தப் பதிலும் இதுவரை கிடைக்காத நிலையில் புராதன சின்னம் எனக் கூறப்படும்  விவேகானந்தா ஆசிரமம் அருகே புதிய மேம்பாட்டுப்பணி நடக்கவிருக்கிறது. இந்த மேம்பாட்டுப்பணியின் காரணத்தினால் ஆசிரமம் மற்றும் சிலையின் இயல்பு நிலை பாதிப்படையும் என்று, கருதப்படுகிறது. ஆனால், ஒரு சாரார் எழுப்பப்படும் புதிய கட்டடம் இந்தியர்களுக்காக இருப்பின் அதை வரவேற்பதுதான் உத்தமம் எனவும் கருத்துக்கூறப்படுகிறது. காரணம் இந்தியர்களின் கட்டடம் என்று சொல்லிக்கொள்ள தற்போது ம.இ.கா கட்டடமும், விஸ்மா துன் சம்பந்தன் கட்டடம் மட்டுமே இருக்கிறது. இப்போது மேலும் ஒரு கட்டடம் வருவது வரவேற்கக்கூடியதுதான் என்றும் கூறப்படுகிறது.
விவேகானந்தா ஆசிரமத்திற்கு எதிராக எத்தனை பேர் போர்க் கொடிபிடித்தாலும், அது சொந்த நிலத்தில் உரிமையாளர் பராமரிப்பில் இருக்கிறது. பொதுச்சொத்தாக இருப்பின் கதையே வேறாக இருந்திருக்கும். சட்டப்படி நிலத்தின் உரிமையாளர் எடுக்கும் முடிவே நிரந்தரமாகும்.
இந்தப் பிரச்னையில் 100 குவார்ட்டர்ஸ் வீடமைப்புப் பகுதியின் நிலை குறித்து யாரும் கண்டுகொள்ளவில்லை.
பிரிக்பீல்ட்ஸில் இன்னும் மிஞ்சப்போவது என்ன?
(தேடல் தொடரும்)








செவ்வாய், 9 டிசம்பர், 2014


அந்த கதவு

சிலநாட்களுக்கு முன்பு
திறந்த  கதவு
ஏனோ மீண்டும்
சாத்திக்கொண்டது
சாத்திக் கொள்வது 
கதவின் குணம்
நம்பிக்கையை வளர்த்துக்கொண்டதில்
கதவின் குற்றம் என்ன இருக்கிறது
நான் பார்த்திராத, தொட்டிராத
அந்தக் கர்பனைக் கதவு
சாத்திக்கொண்டது மட்டும்
கர்பனை அல்ல

கதவுகளே இல்லாத
ஒரு வீட்டை அமைப்பதும்
சாத்தியமில்லைதான்
நான் கனவு காண்கிறேன் என்
தார்மீகச் சாம்பல் சுமையுடன்என்ற
பாப்லோ நெரூடாவின் வரி
எங்கிருந்தோ எனக்குக் கேட்க தொடங்கியது
-யோகி



ஞாயிறு, 7 டிசம்பர், 2014

‘காவியத்தலைவனின்' தலைவன் யார்?




சினிமாதான் இன்று உலகின் முதன்நிலை பொழுதுபோக்கு அம்சமாக இருக்கிறது. இருப்பினும், இன்று மாற்று சினிமாவும், கலைபடைப்புகளுமே அதிகமாக உலக மக்களைக் கவர்வதாக உள்ளன. தமிழ் சினிமாவுக்கு 100 ஆண்டு வரலாறு இருந்தாலும் தற்காலத்தில்தான் அதன் போக்கு மாறியிருக்கிறது. ஹீரோம்சத்தை உடைக்கும் காலகட்டமாக இந்திய சினிமா மாறிவருகிறது. பாலீவுட் வட்டாரம்  அந்த மனோநிலைக்கு எப்பவோ போய்விட்ட நிலையில் தமிழ்நாட்டுச் சினிமா இப்போதுதான் தன் நகர்வை நோக்கிய பயணத்தைத் தொடங்கியிருக்கிறது. அதற்கு இளம் இயக்குர்களும் ஒரு  காரணம் என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.
தற்போது வெளியாகியிருக்கும் படம் காவியத்தலைவன். கதைகளம் 60-70 ஆண்டுகள் பின்னோக்கியதாக இருக்கிறது. மேடை நாடக ஆதிக்கத்தையும், சுதந்திர வேட்கையையும், காதலையும், துரோகத்தையும், மன உழைச்சலையும் பேசுகிறான் காவியத்தலைவன்.
முதலில் திரையரங்கத்துக்குப் போய் படம் பார்க்கும் சூழல் கடந்த 6 மாதகாலமாக எனக்கு வாய்க்கவே இல்லை. இதனாலேயே சமீபகாலமாக வெளியீடு கண்ட சில நல்ல படங்களைப் பார்க்கும் வாய்ப்பை இழந்திருந்தேன். ‘காவியத்தலைவனைப்' பார்க்க வைத்தது முகநூலில் வந்த ஒரு விமர்சனம்தான்.  பிரபாகர் வள்ளி என்பவர் பிரபல எழுத்துலக ஆளுமைகளான சுந்தர ராமசாமி, ஜெயமோகன், மனுஷ்யப்புத்திரன் ஆகியோரை  மையப்படுத்தி எழுதிய  ‘இலக்கிய உலகினரின் பார்வை' என்ற அந்த விமர்சனம் சுவாரஸ்யத்தை எனக்குள்  ஏற்படுத்தியிருந்தது. அந்த விமர்சனத்தில் சுந்தர ராமசாமியின் பாத்திரத்தை நாசரும், ஜெயமோகம் கதாபாத்திரத்தை பிரிதிவிராஜும், மனுஷ்யப்புத்திரனின் பாத்திரத்தை சித்தார்த்தும் ஏற்றிருக்கிறார்கள் என்ற வரிகள் அநியாயத்துக்கு எனக்குள் ஆர்வத்தை ஏற்படுத்தியிருந்தன. இம்மூவரும் திரையில் என்னதான் செய்கிறார்கள் என்று பார்க்கவே திரையரங்கத்துக்குப் போனேன்.
படத்தின்  தொடக்கமே என்னை மிகவும் கவர்ந்ததாக இருந்தது. காரணம் பெயர்ப் பட்டியல் ஒளிபரப்புகையில் எழுத்துகளில் ‘கொம்பு' வைத்த எழுத்தைப் பார்த்தபோதே எந்த அளவுக்கு  யோசித்து கதையை கோர்த்திருக்கிறார்கள் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியது. (நான் கொம்பு போட முடியாமல் கஷ்டப்பட்ட பள்ளி வாழ்க்கையும் கொஞ்சம் எட்டிப்பார்த்துவிட்டுச் சென்றது.)  காளியாக சித்தார்த்தும், கோமதி நாயகம் பிள்ளையாக பிரிதிவிராஜும்  பிரதான கதாபாத்திரங்களாக படம் முழுக்க வருகிறார்கள்.
ராஜபாட் கதாபாத்திரத்தை ஏற்று 100 மேடைகளில்  நடித்துப் பெயர் பெற்றிருக்கும் பொன்வண்ணனுக்கும் நாசருக்கும் ஏற்படும் கருத்து வேறுபாட்டில் நாடகக் கம்பெனியைவிட்டு  வெளியேறுகிறார் பொன்வண்ணன். அந்த  இடத்திற்கு தற்போது பொருத்தமான ராஜபாட் யார்? நடிகர் தேர்வில்  உணர்ச்சியுடன் நடித்த பிரிதிவிராஜ் ஓரங்கட்டப்பட்டு, புதுமையைச் செய்த சித்தார்த் தேர்வாகிறார். இதனால், மனமுடையும் பிரிதிவிராஜ்  நாசரிடம் தனது அதிருப்தியை வெளிபடுத்துகிறார். சித்தார்த்தின் காதலை நாசரிடம் தெரியப்படுத்துவதிலிருந்து, வேதிகாவிடம் தனது காதலை வெளிப்படுத்தும்வரை பிரிதிவிராஜ் எல்லா இடங்களிலும் மிளிர்கிறார். சித்தார்த் அவருக்கு என்ன? நாடகக் கலைஞராக அவர் ஏற்றிருக்கும் பாத்திரம் கனக்கட்சிதமாக அவருக்குப் பொருந்தியது என்றே சொல்லலாம்.
காவியத்தலைவனின் உண்மையான தலைவர் யார்? என்ற கேள்வி பல இடங்களில் எட்டிப்பார்க்கிறது. கதையை இயக்கியிருக்கும் வசந்தபாலனா? சித்தார்த்தா? பிரிதிவிராஜா? ஜெயமோகனா, ஒளிப்பதிவாளர் நீரவ்ஷாவா? அல்லது  செட்டமைத்த சந்தனமா?
என்னை பொறுத்தவரை காவியத்தலைவனின் உண்மையான தலைவனே ஏ.ஆர்.ரஹ்மான்தான். கடந்த நூற்றாண்டு கதைக்கு ஏதுவான இசையையும் பாடலையும் நவீன பாணியில் கொடுத்திருக்கும் உண்மையான இசையின் தலைவனாக ஏ.ஆர். ரஹ்மான் வெற்றிபெற்றிருக்கிறார். ஜெயமோகனின் வசனம், கதைகளத்திற்குப் பலமாக அமைந்திருந்தது.  ‘வெயில்', ‘அரவான்', ‘அங்காடித் தெரு' போன்ற படங்களை இயக்கியிருக்கும் வசந்தபாலனின் இந்தப்படத்தை சித்தார்த் தனது லட்சிய படம் எனக்கூறியிருந்தார். ஆனால், நம்மூர் திரையரங்குகளில்தான் நல்ல படத்திற்கு எப்போதும் கூட்டம் இருக்காதே. நான் போன திரையரங்கிளும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு கூட்டம் இல்லைதான். அதனாலேயே விசில் சத்தம், பேச்சு சத்தம் போன்ற இடையூறுகள் இல்லாமல் நிம்மதியாகப் படம்பார்த்து வந்தேன்.
ஒன்றுகூற மறந்துவிட்டேன், சுதேசி நாடகம் போட கிளம்புகிறேன் என்று சித்தார்த் கிளம்பும்போது, மனுஷ்யப்புத்திரன் ‘உயிர்மை' தொடங்கப்போகிறார் என்று எனதருகில் இருந்த துணைவரிடம் கூறினேன். அவர் சபாஷ் என்றார். அதன் அர்த்தம் பிரபாகர் வள்ளி விமர்சனம் படித்தவர்கள் அறிவார்கள்.




பிரிக்பீல்ட்ஸ் ‘லிட்டல் இந்தியா' தானா? 2

லிட்டல் இந்தியாவில் இந்தியர்களின் அடையாளம் அழியும்

பிரிக்பீல்ட்ஸ் என்றாலே கட்டாயமாக  சில இடங்கள் அதன் அடையாளமாக நம் நினைவுகளில் வந்துபோகும். மஹா விஹாரா புத்தர் கோயில்,  தேவாலயங்கள், விவேகானந்தா ஆசிரமம், கற்பக விநாயகர் கோயில் மற்றும் 100 குவார்ட்டஸ் என்று அழைக்கக்கூடிய குடியிருப்புப் பகுதி ஆகியவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். (உண்மையில் பிரிக்பீல்ட்ஸை அடையாளப்படுத்துவதற்குப் பிரபலங்களும் இருக்கிறார்கள்) புத்தர் கோயில் சிலோன்காரர்களின் பராமரிப்பில் உள்ளது. தேவாலயங்கள் அரசாங்க ஆதரவு இல்லாமலே பராமரித்துக்கொள்ளும் பலம் கொண்டுள்ளன. விவேகானந்தா ஆசிரமம் இலங்கை தமிழர்களின் பராமரிப்பில் உள்ளது. கற்பக விநாயகர் கோயில் உட்புறத்தில் அமைந்துள்ளதால் இப்போது அதற்கு எந்தப் பிரச்னையும் இல்லாமல் இருக்கலாம். 100 குவார்ட்டஸ் வீடமைப்புப் பகுதி இடிப்பதற்குத் தயார் நிலையில் இருக்கிறது. பிரிக்பீல்ட்ஸ் வட்டாரத்தில் அமைந்திருக்கும் பல இந்தியக் கடைகள் இந்தியர்களுக்கே சொந்தமில்லை என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? சீனர்களுக்குச் சொந்தமானகடையை வாடகைக்கு எடுத்து வியாபாரம் செய்து வந்தால் அது இந்தியர்களுக்காக ஒதுக்கிய இடமாகிவிடுமா? அல்லது லிட்டல் இந்தியா என்ற பெயர்தான் உண்மையாகிவிடுமா?
பிரிக்பீல்ட்ஸ் வட்டாரம்  2008-ஆம் ஆண்டு மேம்பாடு காணப்பட்டு 2010-ஆம் ஆண்டு ‘லிட்டல் இந்தியா' என்று பெயர் மாற்றம் கண்டது. இந்தத் திட்டம் அப்போது கூட்டரசுப் பிரதேச மற்றும் நகர்ப்புற நல்வாழ்வுத்துறைத் துணை அமைச்சராக இருந்த டத்தோ எம்.சரவணனின் முயற்சியில் முன்னெடுக்கப்பட்டது.  அவர் வகித்திருந்த பதவிக்குக் குறிப்பிட்ட 5 வருடங்களில் என்ன செய்தார்? என்று கேட்டால் அவர் கைகாட்டுவதற்கு ஏதுவாக அமைந்ததுதான் ‘லிட்டல் இந்தியா'.

பிரிக்பீல்ட்ஸ்  வாசிகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி, போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, வாகனம் நிறுத்தும் வசதிகளை மேம்படுத்தி, கட்டடங்களுக்கு புதுசாயம் பூசுவதற்கும், பூக்கடைகளை ஒரே வரிசையில், கட்டித்தருவதற்கும் இன்னும் சில இத்தியாதி இத்தியாதிகளுக்கும் செலவு செய்த பணம் 35 கோடி வெள்ளி.(இப்போது டத்தோ எம்.சரவணன் இளைஞர் விளையாட்டுத்துறை துணையமைச்சராக  இருக்கிறார்)

அந்தச் சாயம் பூசிய சாலையைத் திறக்க நமது பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப்பும், அப்போதைய இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கும் சிறப்பு வருகையளித்து பிரிக்பீல்ட்ஸ் வட்டாரத்திற்கு  ‘லிட்டல் இந்தியா'  என்று அதிகாரப்பூர்வமாகப் பெயர் சூட்டி திறந்து வைத்தனர். வரலாற்றுப் பதிவை செய்திருக்கும் இந்த விழாவில் பேசிய இந்தியப் பிரதமர் மன் மோகன் சிங், இந்திய மக்களின் சேவையைக் கருத்தில் கொண்டு, லிட்டல் இந்தியா எனும் ஒரு இடத்தை இந்திய மக்களுக்காக ஒதுக்கிக் கொடுத்தது, மலேசிய  பிரதமரின் பெருந்தன்மையை காட்டுவதாகக் கூறியிருந்தார். (இப்போது நினைக்கும்போது பரிதாபமாகத்தான் இருக்கிறது)  அன்றைய தினத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டத்தோ சரவணன்,நாட்டில் இந்தியர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் நோக்கத்திலேயே இந்த மேம்பாட்டை மேற்கொண்டதாகக் கூறியிருந்தார். 4 ஆண்டுகள் முடிந்தவிட்ட நிலையில் லிட்டல் இந்தியாவில் உயர்ந்தது என்ன? வானுயரக் கட்டடங்கள். யார் கட்டியது? இந்திய தொழிற்முனைவர்களா? அல்லது இந்திய நிறுவனங்களா? அல்லது இந்தியர்களுக்காகவாவது கட்டப்பட்டதா?
இந்தியர்கள் அதிகமாகப் புழங்கும் இடங்களில் பிரிக்பீல்ட்ஸும்  அடங்கும். ஆனால், தற்போது புதிதாகக் கட்டப்பட்ட அதிநவீன பேரங்காடிகளும், கண்ணாடிக் கட்டடங்களும், இன்னும் கட்டப்படவிருக்கும் கட்டடங்களும் நிச்சயமாக நமக்கானதாக இல்லாத வேளையில், பிற இனத்தவர்களின் ஆதிக்கமே அதிகமாக இருக்கப்போகிறது என்பது உண்மை. எனது தேடலின் போது பிரிக்பீல்ட்ஸ் தபால் அலுவலக எதிர்ப்புறமுள்ள  ஒரு பார்க்கிங் இடத்திற்கு உட்புறம் அந்நிய நாட்டவர்கள் வியாபாரம் செய்யும் கடைவரிசையைக் கண்டேன். குறைந்தது 4 கடைகளாவது இருக்கும். அந்த இடம், லிட்டல் இந்தியாவுக்கு உட்பட்டதா? அல்லது இந்தியர்கள்தான் அவர்களுக்கு அந்த இடத்தை வாடகைக்கு விட்டிருக்கிறார்களா என்றெல்லாம் தெரியவில்லை. ஆனால், பிள்ளையார் சுழி போடப்பட்டுவிட்டதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.
பிரிக்பீல்ட்ஸ் சாலையில்  2010-ஆம் ஆண்டுக்கு முன்பு  பயணித்தவர்கள் அறிவார்கள். நாம் அந்தச் சாலையில் பயணிப்பது எவ்வளவு சுலபமாக இருக்கும் என்று. இப்போது, இந்தியர்கள் கடைக்குச் செல்ல வேண்டும் என்றால் ஒரு பிரிக்பீல்ட்ஸ்சையே சுற்றித்தான் வரவேண்டியுள்ளது. இடத்தை சற்று தவறவிட்டாலும் மீண்டும் ஒரு பிரிக்பீல்ட்ஸையே வட்டமடிக்க வேண்டிய நிலை. இது ஒரு பிரச்னையா? எனலாம். தினமும் போய் வருபவர்களுக்கு பழகிவிட்ட நிலையில், ஆடிக்கும் அமாவாசைக்கும் போய்வரும் என்னைப் போன்றவர்களுக்கு இது பெரிய பிரச்னையாகத்தான் உள்ளது. அதோடு, அவ்வப்போது கலைநிகழ்ச்சிகள், கலை இல்லாத நிகழ்ச்சிகள் என்று சாலையின் ஓரம் செய்யப்படும் கோலாகல விழாக்களில் நெரிசல் கழுத்தை நெரிக்கிறது.
என்னுடைய ஆதங்கம் இந்த லிட்டல் இந்தியாவில் ஏன் இந்தியர்கள் வாழ்ந்த பல இடங்கள் அழிவை நோக்குகிறது என்பதுதான்.  உதாரணமாக 100 ஆண்டுகள் வரலாற்றை எட்டிப்பிடிக்கப்போகும்  100 குவார்ட்டஸின்  வீடுகளில் மிஞ்சி இருக்கும் சில வீடுகளும் இடிப்பதற்குத் தயார் நிலையில் இருக்கின்றன. இந்தியர்கள் வாழ்ந்த அந்த வீடுகளுக்கு மேல்தான் கேஎல்  செண்ட்ரலும் கட்டப்பட்டிருக்கிறது.
அண்மையில் நான் நேர்காணல் கண்ட ஹிண்ராப் தலைவர் பி.உதயகுமார் இந்த 100 குவார்ட்டஸ் குறித்த ஒரு தகவலைச் சொன்னார்.

-தேடல் தொடரும்






செவ்வாய், 2 டிசம்பர், 2014

பிரிக்பீல்ட்ஸ் ‘லிட்டல் இந்தியா' தானா?


நான் தலைநகருக்கு வந்த புதிது. பெட்டாலிங் ஜெயாவில் உள்ள ஒரு புகழ் பெற்ற தொழிற்சாலையில் வேலைக்குச் சென்றிருந்தேன். தொழிற்சாலை ஏற்படுத்திக் கொடுத்திருந்த பேருந்து சலுகை மிகவும் பாதுகாப்பானது. வீட்டின் அருகிலேயே வேலையாட்களை ஏற்றிக்கொண்டு, வேலை முடிந்ததும் ஏற்றிய இடத்திலேயே இறக்கிவிடும். ஆனால், வேலைக்குச் சென்ற பிறகு ஏதும் பிரச்னையால் வீடு திரும்ப வேண்டும் என்றால்,  சொந்தமாகத்தான் வரவேண்டும். நான் பால்முகம் மாறாத குழந்தையைப் போல், இருந்த காலம் அது.

தலைநகரமே எனக்குப் புதிது என்ற படியால் ஒருவகை மிரட்சி இருப்பதை என்னைப் பார்த்த மாத்திரமே கண்டு கொள்ளலாம். ஒரு முறை உடல் நலக்குறைவால் நான் தொழிற்சாலையிலிருந்து வீடு திரும்பும் நிலை ஏற்பட்டது. நம்பிக்கையானவர்களிடத்தில் எப்படி வீட்டுக்குப் போவதென்ற விவரங்களைக் கேட்டறிந்துகொண்டேன்.
மூன்று ‘இண்ட்ர கோத்தா' பேருந்துகளை மாறிச் செல்ல வேண்டிய நிலை எனக்கு. தொழிற்சாலை மருத்துவமனையில் கொடுத்த மருந்தினை உண்டிருந்த காரணத்தினால், ஒரு அரை மயக்கம் விடாமல் ஒட்டிக்கொண்டிருந்தது. அந்த மயக்கத்தினூடே பேருந்தில் வீட்டிற்குச் செல்வதற்கு முடிவெடுத்து, வெற்றிகரமாக இரண்டாவது பேருந்தையும் மாறிவிட்டிருந்தேன். மருந்தின் தீவிரம் தூக்கத்தில் என்னைத் தள்ளிவிட உறங்குவதும் விழிப்பதுமாக வழியைப் பார்த்துக்கொண்டு வந்தேன். அப்படி இடையில் விழித்த போதுதான் முதன் முதலாக அந்த வெங்கல வர்ணத்திலான விவேகானந்தா சிலையைப் பார்த்தேன். தலைநகரில் அப்படி இரு சிலை இருப்பதே எனக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது. விவேகானந்தரை பிடிப்பதற்கு காரணம் சொல்ல வேண்டியதில்லை. அவரின் தோற்றம் அப்படி. அந்த கம்பிரமே நமக்கு பெருமையளிக்ககூடியது.

தலைநகரிலிருந்து போவதற்குள் அந்தச் சிலையினை அருகில் இருந்து பார்க்க வேண்டும் என்ற ஆவலும் எனக்குப் பிறந்தது. ஆனால், அந்தச் சிலை இருக்கும் இடம் பிரிக்பீல்ட்ஸ் என்றெல்லாம் எனக்குக் தெரியாது.

சுமார் 14 வருடங்கள் கடந்துவிட்ட நிலையில், அந்த சிலை  பிரிக்பீல்ட்ஸ் வட்டாரத்தில் சுமார் 100 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கிறது என்று தெரிந்தும் முன்பு காட்டிலும் வசதிகளும் வாய்ப்புகளும் அதிகமாக இருக்கும் இந்த நேரத்திலும் கூட அந்த விவேகானந்தா சிலையை நான் அருகில் இருந்து காண கொடுத்து வைக்கவில்லை.
காரணம் முன்பும், இப்போதும், எப்போதும் அந்தச் சிலை இருக்கும் வாயிற்கதவு சாத்தியே இருப்பதுதான். ஒவ்வொரு முறையும் அந்த வளாகத்தை கடக்கும் போது என்னுடன் வருபவர்களிடத்தில் என் ஏக்கத்தை வெளிபடுத்துவதற்குத் தவறியதே இல்லை.
இப்போது ஒட்டுமொத்த இந்தியர்களின்  போராட்டம் விவேகானந்தா சிலையைக் காப்பாற்றுவதில்  இருக்கிறது. 100 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்தச் சிலையை உடைக்க மாட்டோம் என்றும் இடமாற்றம் ஏதும் செய்ய மாட்டோம் என்றும் விவேகானந்தா ஆசிரம நிர்வாகம் கூறியிருந்தும் தொடர்ந்து கண்டனக் குரல்களும் எதிர்ப்புகளும், கிளம்புவதற்கான காரணம் என்ன?
என் தேடலுக்கான கேள்விகளை சுமந்துகொண்டு பிரிக்பீல்ட்ஸ் விவேகானந்தா ஆசிரமம் நோக்கிப் பயணமானேன். வழக்கம் போலவே விவேகானந்தா ஆசிரமம், சிறையில் சிக்கி இருப்பதைப் போன்று வாயிற்கதவு தாழிடப்பட்டிருந்தது.

ஆனால், விவேகானந்தர் மற்றும் அதே மௌனத்துடன் நின்று கொண்டிருந்தார்.   அந்த வளாகத்தின் ஒரே மாற்றம், வாயிற் கேட்டின் இரும்புக் கம்பிகளில் மஞ்சள் நிறத்திலான ரிப்பன் பல நூறு கட்டப்பட்டிருந்ததுடன் வாயிலின் முன் புறம் சிலர், ஆசிரமத்தின் நிலையை எடுத்துக்கூறி பொது மக்களிடம் கையொப்பம் பெற்றுக்கொண்டிருந்தனர். இது ஒரு புறம் இருக்க, நமக்கும் அதாவது மலேசியாவுக்கும் விவேகானந்தருக்கும் என்ன சம்பந்தம்? என்பது உங்களுக்கு தெரியுமா?
இந்தியர்களுக்கும், மலேசியாவுக்கும் 6-7-ஆம் நூற்றாண்டு தொடர்பு உண்டு என்று ஆவணங்கள் கூறினாலும்,  18-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில்தான் பிரிட்டிஷ்காரர்களால் இந்தியர்கள் கூலி வேலைக்காகக் கொண்டு வரப்பட்டது அடையாளமாகக் கூறுப்படுகிறது. 19-ஆம் நூற்றாண்டில் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, இரும்புப் பெண்மணி  என்று அழைக்கக்கூடிய இந்திரா காந்தி உள்ளிட்ட பல முக்கிய  வரலாற்றுத் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் மலேசிய இந்தியர்களைச் சந்தித்துச் சென்றது வரலாற்றுப் பதிவுகள் செய்யப்பட்டுள்ளன. சில தலைவர்களின் வருகை வெறும் வாய்ச்சொல்லாகவும், பதிவாக உள்ளது. (அது தொடர்பாக வேறொரு தளத்தில் பதிவு செய்கிறேன்.)

மலேசியாவும் விவேகானந்தரும் உலகம் முழுக்கப் பயணம் செய்த சுவாமி விவேகானந்தா 1893-ஆம் ஆண்டு மலாயாவுக்கு வந்தார். அவர் வருகையின் நினைவாக, அதைப் பதிவு செய்யும் பொருட்டு  மலாயாவைச் சேர்ந்த சிலோன் தமிழர்கள் அழகிய விவேகனந்தரின் சிலையை நிறுவினர். அந்த ஆளுயரச் சிலை வெண்கலத்தால் செய்யப்பட்டதோடு, சுவாமி விவேகானந்தரை தத்ரூபமாகப் பிரதிபலித்தது. கூடவே விவேகானந்தா ஆசிரமமும் பெரிய அளவில் கட்டப்பட்டது.
அப்போது, இந்தியர்கள் சம்பந்தப்பட்ட அடையாளங்களைப் பதிவு செய்வதும், நிர்மாணிப்பதும் இன்றுபோல் கடினம் அல்ல. இன்று அடையாளங்களை அடையாளப்படுத்துவதைவிட அதை அழிவிலிருந்து காப்பாற்றுவதே நமது பெரிய தலையாயக் கடமையாக இருக்கிறது.

விவேகானந்தா ஆசிரமத்துக்கு நடந்தது என்ன?
கடந்த அக்டோபர் மாதம் ‘தெ ஸ்டார்' நாளேடுதான் முதன் முதலாக பிரிக்பீல்ட்ஸில் இருக்கும் விவேகானந்தா ஆசிரமப் பிரச்னையை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தது. ஆசிரமத்துக்கு அருகில் அமைக்கப்படும் பார்க்கிங் வசதியைக் குறித்த செய்தியையும், ஆசிரம நிர்வாக நிலைப்பாட்டைக் குறித்த செய்தியையும் அந்த நாளேடு பதிவு செய்திருந்தது.  மேலும், 23 மாடிகளைக் கொண்ட  264 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளதையும் அந்த நாளேடு சுட்டிக்காட்டியிருந்தது. அதன் பிறகே எல்லா இந்திய தலைவர்களுக்கும் தமிழ் ஊடகங்களுக்கும் இந்த விவரம் தெரிய வந்தது.

(ஒரு வேளை ‘தெ ஸ்டார்' நாளேடு இந்த விவரத்தை வெளியிடாமல் இருந்திருந்தால், மேம்பாட்டுப் பணி தொடங்கியிருந்தாலும் நமக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை என்று நினைக்கிறேன்)
இவ்விவகாரத்திற்கும் லிட்டல் இந்தியாவுக்கும் என்ன சம்பந்தம் என கேக்குறீங்களா?

(தேடல் தொடரும்)