செவ்வாய், 30 செப்டம்பர், 2014

எங்கள் நாட்டில் சாதி இல்லை!


-யோகி

மலேசியாவில் சாதி இல்லை என்று பலர் சொல்ல நீங்கள் கேட்டிருக்கலாம். செசெ.. அதெல்லாம் கல்யாணத்தின்போது மட்டும்தாங்க…” என பல்லிளிக்கும் கூட்டம் இங்கு அதிகம். இன்னும் கொஞ்சம் முற்போக்காகப் பேசுகிறேன் பேர்வழிகள் சாதியப் பற்றி பேசலைன்னா அது தன்னால ஒழிஞ்சுருங்கநாம தமிழரா இணைஞ்சிருப்போம்என நாம் தமிழர்சீமான் போல சீன் போடுவதுண்டு. மற்ற அனைத்தையும்விட சீமான் போன்றவர்களின் அரசியலே சாதியை வளர்க்ககூடியது. தமிழர்கள்எனும் அடையாளத்தின் கீழ் ஒன்று சேர்வார்களாம். ஆனால் சாதிய மனம் அப்படியே அடியில் இருக்குமாம். இவர்கள் சொல்லும் தமிழர்கள் இணைப்பில் தலித்துகளோ அவர்கள் நலன்களோ காக்கப்படாததும், அவர்களுக்காக எவ்விதத்திலும் போராடாததற்கும் தருமபுரி சம்பவமே ஒரு சமீப சான்று. தமிழர்கள் என்ற தேசியத்தின் கீழ் தலித்துகள் இவர்கள் பட்டியலில் அடங்குவதில்லை. சமூகத்தில் ஊடுருவியுள்ள ஒரு நோய்மை குறித்துப் பேசாமல் இருப்பது அதனோடு ஒத்துப்போவதற்கு சமமானதே. இன்னும் சொல்லப்போனால் அதன் வளர்ச்சிக்கு நாம் இடதுகையால் உரம் போடுகிறோம் என்றே அர்த்தப்படும்.

மலேசியாவில் இந்தநிலை நெடுங்காலமாகவே இருந்து வருவதுதான். இண்டர்லோக்நாவல் விவகாரத்தில் கொஞ்சம் சமூகத்தில் உள்ள சாதி குறித்து பேசப்பட்டு பின்னர் அமுங்கிப் போனது. தாங்கள் ஒடுக்கப்பட்ட சாதியினர் இல்லை எனப் பிரகடனப்படுத்த எல்லோருக்கும் அந்தச் சம்பவம் பெரும் பாதை அமைத்துக்கொடுத்தது. இப்படி மலேசியாவில் உள்ள சாதி அமைப்பு குறித்து பேசுவதை ஒரு பாவமாக்கிவிடும் கூட்டம் ஒரு பக்கமும் தமிழர்கள்எனும் அடையாளத்தால் ஒன்றிணைவோம் அதனால் சாதி அழியும் என கூச்சல் இடும் கோமாளிகள் மறுபக்கமும் என மலேசிய சூழல் போய்க்கொண்டிருக்க, வெளியில் உள்ளவர்களிடம் எங்கள் நாட்டில் சாதி இல்லைஎனச் சொல்ல வசதியாகி விடுகின்றது.

சாதிகள் என்று ஒன்றும் இல்லை என்று வெறும் பேச்சினில் மட்டுமல்லாமல் தன் வாழ்க்கைத் துணையையும் நண்பர்களையும் மனம்போலத்தேடிக்கொண்டவர் என் தந்தை. ஆனால், என் அப்பாவை சார்ந்தவர்கள் அவரை ஒதுக்கி வைத்திருந்த காலகட்டத்திதான், மீண்டும் இணைவதற்குக் காரணமாக நானும் என் தம்பியும் பிறந்தோம். எங்கே பிள்ளைகள் தாய்வழி சமுகமாக வளர்ந்து விடுவார்களோ என்ற அச்சத்தோடே என் அப்பாவை சார்ந்தவர்கள் மீண்டும் அப்பாவோடு இணையத் தொடங்கினர். அதற்கு இன்னும் வலுவான சம்பவமாக என் பூப்பெய்த நாள் சடங்கு நிகழ்வு அமைந்தது. அப்பாவுடன் பிறந்த என் அத்தைகள் தங்கள் உரிமையை நன்றாகவே அன்றைய தினம் நிலைநாட்டினர்.

நானும் அன்றுதான் என் அப்பாவின் குடும்பத்தாரை முழுமையாகக் கண்டேன். என் அப்பாவின் உடன் பிறப்புகளில் மூத்தவர் லெட்சுமி அத்தை. அந்தக்குடும்பத்தின் சாதி காப்பாளர் தலைவராகவே அவர் இருந்தார். தாய் வழிச் சமூகமாக வளர்ந்து கொண்டிருக்கும் எங்களைத் தந்தை வழிச் சமூகமாக மாற்றுவதற்கு எல்லா முயற்சிகளையும் அவரே மேற்கொண்டார். அதன் முதல் திட்டமாக பள்ளி விடுமுறையில் என்னை அவர் வீட்டுக்கு அழைத்துச் சென்றுவிடுவார். எனக்கு 14 வயது இருக்கும். அத்தையின் சாதி கற்பித்தல் மிகவும் நூதனமானது; பயங்கரமானது. அதற்கு ஒரு சம்பவத்தை எடுத்துக்காட்டாகச் சொல்கிறேன்.

மிக அழகான, வசதியான, பளிங்குக் கற்கள் போட்ட, குளிர்சாதன வசதிகொண்ட சொகுசு வீடு அத்தையுடையது. 80-ஆம் ஆண்டுகளில் அவர்கள் அந்த வீட்டைக் கட்டினார்கள். அது உண்மையில் பெரிய விஷயம். காரணம் வசதி படைத்த தலைவர்களும், சீனர்களும் மட்டுமே அப்படி ஒரு வீட்டை அந்தக் காலகட்டத்தில் கட்டி இருந்தனர். (அவர்களின் அந்த வீட்டுக்கும், சொத்துக்கும் பின்புலமாக, அவர்கள் சூரையாடிய பலரின் வாழ்வும், உழைப்பும் உள்ளதைப் பின்னாளில்தான் தெரிந்துகொண்டேன்.)

எனக்கு அந்த வீடு மிகவும் பிடிக்கும். அத்தைக்கு 3 ஆண் 1 பெண் பிள்ளைகளும் இருந்தனர். அத்தை மகன்களில் ஒருவருக்கு என்மேல் விருப்பம் இருந்ததால், அதைச் சாதகமாக்கிக்கொள்ள சிறு வயது பிள்ளை என்றும் பாராமல் எனக்குத் தீவிரமாக சாதிப் பாடம் எடுத்தார். அத்தையின் விசாலமான வீட்டில் சமையலறை தனி வரவேற்பறை மாதிரி இருக்கும். வீட்டிற்கு உபயோகப்படுத்துவது அனைத்தும் சில்வர் பாத்திரங்கள்தான். வீட்டிற்கு வெளியே பின்புறத்தில் தனியாகக் கண்ணாடி பாத்திரங்கள், குவளைகள் அடுக்கிய ஒரு அடுக்கு இருந்தது. அதில் இருக்கும் பொருள்களை அத்தை உபயோகப்படுத்தவே மாட்டார். மாமா செம்பனை தோட்டங்களைக் குத்தகைக்கு எடுத்து, ஆள்களை வைத்து வேலை செய்துகொண்டிருந்தார்.

வேலைக்கு வராதவர்கள் காரணம் சொல்வதற்கோ, கைப்பணம் வாங்குவதற்கோ அத்தையின் வீட்டிற்கு வருவதுண்டு. வருபவர்கள் வாசலைத்தாண்டி வீட்டிற்குள் வரமாட்டார்கள். அப்படி வந்தவர்களில் ஒருவர் என்னிடம் குடிப்பதற்குக் கொஞ்சம் தண்ணீர் தரும்படி கேட்டார். நான் வீட்டிலிருந்த குவளையில் தண்ணீர் கொண்டு வந்தேன். என்னைத் திரும்பி பார்த்த அத்தை அதிர்ச்சியானார். உள்ளே போடி நாயே,” என்றார். எனக்கு அத்தை ஏன் ஏசுகிறார் என்று புரியவில்லை. சில்வர் குவளையில் தண்ணீர் கொடுக்கிறாயே, உனக்கு அறிவு இருக்கா?” என்றார். வாசலிலேயே உட்கார வைத்திருக்கேனே அவர்கள் பறையர்கள் என்று உனக்குத் தெரியவில்லையா?” என்று கடுமையாக வசைபாடினார். பிறகுதான் தெரிந்தது வீட்டிற்கு வெளியே உள்ள பாத்திரங்கள் அத்தை தீண்டத்தகாதவர்கள் என்று நினைப்பவர்களுக்காக ஒதுக்கியது என்று. அந்தப் பாத்திரத்தில் உணவையோ, தண்ணீரையோ கொண்டு வரும்போது வீட்டிற்கு உள்ளிருந்து கொண்டுவரக்கூடாது. வெளிப்புறமாகவே வரவேண்டும். உபயோகப்படுத்தின பாத்திரங்களையும் வந்த வழியே கொண்டு போய்க் கழுவி, இருந்த இடத்திலேயே வைத்துவிட வேண்டும்.

அவர்கள் சென்ற பிறகு, வாசலைக் கழுவ வேண்டும். அத்தையின் இந்த நடவடிக்கைகளை அவர்களின் குடும்பத்தினர் மிகவும் தீவிரமாகப் பின்பற்றி வருகின்றனர். நான் மட்டுமே பச்சைப் பிள்ளையாக அந்த வீட்டில் இருந்தேன். அத்தை என்னை அவரின் மருமகள் ஆக்கிக்கொள்வதற்குக் கடுமையாகப் போராடிக்கொண்டிருந்தார். ஆனால், அங்கு நடந்த ஒவ்வொரு சம்பவமும் சாதிக்காப்பாளர் வீடுகளில் மிகச் சாதாரணமாக நடந்துகொண்டிருக்கும் என்பது அவர்களிடத்தில் போன பிறகுதான் தெரிந்தது. அதிகம் படிக்காத அப்பா காதலினால் ஈர்க்கப்பட்டு, சாதி பார்க்காமல் திருமணம் செய்துகொண்டார் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் சிறுவயதிலிருந்தே அப்பா எல்லாரிடமும் நட்புடன் பழகியதை மாபெரும் குற்றம்போல், அத்தையும் பாட்டியும் திரும்பத் திரும்பக் கூறியபோதுதான் அப்பா வேறு மாதிரி என்று உணர்ந்துகொண்டேன்.

அத்தையின் சாதி பிடிப்பு என்னை இரவு பகலாக ஆட்டிப் படைத்தது. ஒவ்வொரு விஷயத்திலும் சம்பவத்திலும் சாதியை நுழைப்பதில் அத்தையை மிஞ்சியவர்கள் இருப்பார்களா தெரியவில்லை. அத்தையின் இந்த நடவடிக்கையால் சொகுசான அத்தைவீடு சிறையாக மாறி வருவதை வெகுசீக்கிரமே உணர்ந்துகொண்டேன். அத்தை மகன்மேல் கொண்ட மயக்கம் எல்லாம் பயமாக மாறிப்போனது. ஒரு மாதம்கூட முழுமையாக முடியாத நிலையில், அத்தை வீட்டில் தொடர்ந்து இருந்தால் மனநல காப்பகத்திற்குச் செல்வது உறுதி எனத் தெளிவாகத் தெரிந்தது. அதுவே நான் அத்தைவீட்டில் தங்கியது முதலும் கடைசியுமாகும். அத்தைப்போல சாதித் தீவிரம் அப்பா குடும்பத்தைச் சேர்ந்த அனைவரிடத்திலும் இருந்தது. என் வயதை ஒத்த அவர்களின் பிள்ளைகள் சட்டென்று சாதி பெயர் சொல்லி ஒருவரை சுலபமாகத் தாக்குவதில் எந்தக் குற்ற உணர்ச்சியையும் கொண்டிருக்கவில்லை.

நான் தலைநகருக்கு வந்த பிறகு கம்பத்தில் உள்ளதுபோலத் தீவிர சாதியர்களை அவ்வளவாகக் காண முடியவில்லை. தந்தையின் மறைவிற்குப் பிறகு குடும்பத்தைக் காப்பாற்றுவதிலேயே எனது மொத்த நேரத்தையும் செலவு செய்ததால் நாட்டில் நடப்பதையும், சமூக விஷயங்களையும் கண்டுகொள்ளாமலேயே சுயநலமாக இருந்துவிட்டேன். அந்தக் குற்ற உணர்வு என் மனதின் ஓரத்தில் இன்றும் இருக்கவே செய்கிறது. குறிப்பாக மலேசிய அரசியலைப் பற்றித் தெரிந்துகொள்வதற்கு நான் விரும்பியதே இல்லை. எல்லோரும் சொல்வதுபோலதிருமணத்தில் மட்டும் சாதி பார்ப்பதாக இருந்த பேச்சையும் நம்பியதுண்டு. இவை அனைத்தும் எளிய மக்களின் சுய கருத்து மட்டும்தான் என்பதை நான் நிருபராகிய பிறகு தெரிந்துகொண்டேன். அரசியலில், கோயில்களில், அரசு சாரா அமைப்புகளில் சாதியம் எவ்வாறு புகுந்து ஆட்சி செய்கின்றது என்பதையும் அது மேல் மட்டத்தில் எவ்வாறு இயங்குகிறது, இயக்குகிறது என்பதையும் அறிய வாய்ப்பும் கிடைத்தது.

ஆதி.குமணன் வாழ்ந்த காலத்தில் தான் ஆசிரியராக இருந்த நாளிதழில் எவ்வளவு பணம் கொடுத்தலும் சாதி சார்ந்த விளம்பரம் வராது என அறிவித்திருந்தார் என்பது பலரது நினைவில் இருக்கலாம். இன்று அவரது அல்லக்கை நல்லக்கை நொல்லக்கை எனச் சொல்லிக்கொள்பவர்கள் தங்கள் பத்திரிகை விற்பனைக்காக எவ்வாறான சமரசங்களில் ஈடுபடுகிறார்கள் என கொஞ்சம் நாளிதழ்களை ஆராய்ந்தாலே புரியும். வணிகத்துக்காக ஆதியின் பெயரை ஒரு பக்கமும் சாதி சங்கங்களின் பெயரை மறுப்பக்கமும் பிரசுரித்து லாபம் தேடும் இவர்கள் சமூகத்துக்காகப் போராடுவதாக வர்ணிப்பதெல்லாம் தங்கள் வயிற்றுப்பாட்டுக்குதான். சமூகம் என சொல்லிக்கொள்வதும் தங்களின் குடும்பத்தைதான்.

அடுத்ததாக மலேசியத் தமிழர்களின் தாய்க்கட்சி என்று சொல்லக்கூடிய ம.இ.கா சாதி கட்சிதான் என்ற கருத்துகளை ஆதாரங்களுடன் கட்சியில் உள்ள சிலரும் எதிர்கட்சியினரும் மிக வலுவாக முன்வைக்கின்றனர். அதற்கான சூடான விவாதங்கள் கடந்த ஆண்டு நடந்த ம.இ.கா தேர்தலில் காண முடிந்தது. பல குட்டுகள் அம்பலமானதும் அப்போதுதான். கட்சியின் தேசியத் தலைவரும் ஏதோ ஒரு மேல்தட்டு சாதியின் சங்கத்தில் முக்கிய பொறுப்பில் இருப்பதாகக் கூறப்பட்டாலும் அது வெளிப்படையாக இன்னும் நிரூபிக்கப்படவில்லை. ஆனால், பல அமைச்சர்களின் படங்கள் சாதிச் சங்கங்களின் ஆண்டு இதழ்களில் ஆலோசகர்’, ‘காப்பாளர்என்ற அடைமொழியுடன் வருவதுதான் கொடுமை. இதைத்தவிர இன்றைய பத்திரிகை அதிபர்களாகவும் தமிழ்ப்பள்ளிக் காப்பாளர்களாகவும் தங்களைப் பறைச்சாற்றிக் கொள்பவர்கள் சாதிய அடையாளங்களுடன் கூட்டங்கள் நடத்தியதை அவ்வளவு எளிதில் நாம் மறந்துவிட முடியாது.

இவை ஒருபுறம் இருக்க, அண்மையில் பத்திரிகையில் மிகவும் சூடாக விவாதிக்கப்பட்ட கொங்கு பிரதர்ஸ்சம்பவம் சாதி உயர்மட்டத்தில் மலேசியாவில் எப்படி வேரூன்றியுள்ளது என்பதற்கான சான்று. ம.இ.காவின் முன்னாள் துணைத்தலைவரின் மகன் சுந்தர் சுப்ரமணியம்தான் அந்தப் பிரச்சினையைக் கிளப்பிவிட்டவர். கொங்கு சகோதர்கள் மிகவும் ஒற்றுமையாகச் செயல்பட வேண்டும் என்பதின் விளக்கத்தை அவர் போட்ட வாட்சப்’ (whatsapp) செய்தி அம்பலப்படுத்தியது. அதற்காக சுந்தர் மிகவும் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். உண்மையில் அவர் விமர்சிக்க மட்டுமே பட்டார் என்பதைச் சிறிது அழுத்திச் சொல்ல வேண்டியுள்ளது.

இப்படிப் பல சாதி சம்பவங்களையும் நடவடிக்கைகளையும் காணும்போது அப்படியா? அப்படியா! என்று பல அப்படியாக்களைப் போட்டு நான் அடங்கி விட்டேன். காரணம் முன்பை விடவும் இளம் சமூகத்தினரிடத்தில் மிகத் தீவிரமாக சாதிப் பிடிப்பு இருப்பதைக் கண்கூடாகக் காண முடிகிறது.


திருமணம், கோயில், கட்சி, கூட்டம் என எங்கும் சாதி சூழ்ந்திருக்கும் இந்த நாட்டில், சாதி எதிர்ப்பாளர் அல்லது சாதிக்கு எதிரானவர் ஒவ்வொருவரையும் நான் ஒவ்வொரு பாரதியாகவே பார்க்கிறேன். அதில் முதல் பாரதியாக என் அப்பா இருப்பதில் என்றும் கர்வம் கொண்டவள் நான்.



சனி, 27 செப்டம்பர், 2014

மாதத்தீட்டு பெண்களை விலக்கி வைத்தது


மாதத்தீட்டு பெண்களை  விலக்கி வைத்தது


-யோகி

பெண்ணாய் பிறப்பெடுத்த ஒவ்வொருவரும்  உடல் ரீதியாக முதலில்  சந்திக்கும் பிரச்னை மாதவிடாய் பிரச்னைதான்.  பல பெண்கள் மாதவிடாய் சமயத்தில்  சுகாதார முறையைக் கடைப்பிடித்தாலும், இன்னும் பலர் சுகாதாரமற்ற போக்குடன்தான் இருக்கின்றனர். குறிப்பாக இந்தியப்பெண்கள்  மாதவிடாய் குறித்த விழிப்புணர்வற்றுதான் இருக்கின்றனர்.
மாதவிலக்கு சமயத்தில் சுகாதாரமற்ற முறையை பெண்கள் பின்பற்றுவதால், அவர்களின் அந்தரங்க உறுப்பில் நோய் தொற்றுவதற்கு 70 சதவிகிதம் வாய்ப்பு உள்ளதாக கடந்த வருடத்தில் மேற்கொண்ட ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  மாதவிடாயின்போது பெண்களுக்கு வலி, டென்ஷன் போன்றவை இருந்தாலும், அதிகமான பெண்கள், சிறுமிகள் உட்பட சங்கடப்படுவது  தன்னை சுத்தப்படுத்துவதற்காகத்தான்.  அவ்வப்போது சுத்தம் செய்ய அவர்களுக்கு ‘நாப்கினோ' அல்லது துணியோ  இல்லாதது முதற்காரணமாகப் கருதப்படுகிறது.
குறிப்பாக கம்பத்தில் அல்லது தோட்டத்தில் வசிக்கும் சில பெண்கள்,  மாதவிடாய் சமயத்தில் நாப்கின் பயன்படுத்தாமல்  துண்டு துணியைப் பயன்படுத்துவார்கள். அதன் பயன்பாட்டின் சுத்தம் சந்தேகத்திற்குரியதே. பொதுவாக நாப்கினை பயன்படுத்துபவர்கள் 4 மணி நேரத்திலோ அல்லது அதற்கும் குறைவான நேரத்திலோ நாப்கினை  மாற்றிவிட்டு,  உபயோகித்ததைத் தூக்கி எறிந்துவிடுவதால்  சுகாதாரரீதியில்  பிரச்னை குறைவுதான்.
ஆனால், இங்கே எம்மாதிரியான நாப்கின்களைப்  பெண்கள் பயன்படுத்துகிறார்கள் என்பதும்  ஆராயவேண்டியுள்ளது.  வளர்ச்சியடைந்த நாடுகளில் பெண்கள் சம்பந்தப்பட்ட அனைத்துப் பொருள்களுக்கும் சந்தையில் மவுசு அதிகம். அவர்களின் உச்சந்தலை முதல் உள்ளங்கால்வரை  பயன்படுத்தப்படும் அனைத்துப் பொருள்களுக்கும்  பிராண்ட், திராண்ட் என நாளுக்கு நாள் புதுமை செய்யப்படுகின்றன. இந்த ஆதிக்கவாதிகள்  நாப்கினை விட்டுவைப்பார்களா  என்ன? ஒரு பாக்கெட் நாப்கின், 3 வெள்ளியிலிருந்து  50 வெள்ளிக்கும் அதிகமாகவும் அதன் பிராண்டைப் பொறுத்து  சந்தையில் விற்கப்படுகிறது.   செல்வந்தர்களின் தயாள குணத்தைப் பற்றி இங்கு  பேசத்தேவையில்லை. ஆனால், 3 வெள்ளி கொடுத்து நாப்கினை வாங்க வசதி இல்லாதவர்களும் இன்னும் நம்மத்தியில் இருக்கத்தானே செய்கிறார்கள்.  விலை மலிவான  நாப்கின்களில் இருக்கும்  ரசாயனங்கள் பிறப்புறுப்பில் அலர்ஜி, சிறுநீர் கழிப்பதில் சிரமம், வெள்ளைபடுதல், அதிகமான உதிரப்போக்கு, கர்ப்பவாய் புற்று நோய் என்று பல பிரச்னைகளை ஏற்படுத்த  வாய்ப்பிருக்கிறது.
மாதவிடாய் சமயத்தில் உபயோகப்படுத்தும் நாப்கினை வாங்குபவர்கள் அதன் காலாவதி தேதியைப் பார்த்து வாங்குவதில்லை. சில நிறுவனங்கள் அதுகுறித்த விவரத்தை வெளியிடுவதில்லை.  மாதவிடாய் ஏற்படும் பெண்கள் இதுபோன்ற விசயங்களில் கண்டிப்பாகக் கவனம் செலுத்த வேண்டும் என்கிறது உலக சுகாதார அமைப்பு.
முன்பெல்லாம் பெண்கள் 13 வயதிலிருந்து பூப்படையத் தொடங்குவார்கள். தற்போது 9-10 வயதுச் சிறுமிகள்கூட பூப்படைந்துவிடுகிறார்கள். அதிலிருந்து அவர்கள் ‘மெனோபாஸ்' அதாவது முதிய வயதில் மாதவிடாய் இயற்கையாக நிற்கும்வரை  கிட்டத்தட்ட 30 ஆண்டிற்கும் அதிகமாக நாப்கின்களைப் பயன்படுத்துகிறார்கள். ரசாயனக் கலவையால் தயாரிக்கப்பட்ட நாப்கின்களைத் தொடர்ந்து உபயோகப்படுத்தும்போது, அதன் பக்க விளைவுகள் தவிர்க்க முடியாததாகிறது.
அதைவிடவும், மாதவிடாய் குறித்த புரிதல்கள் சமூகத்தில் எப்படிப் பார்க்கப்படுகின்றன என்பதைச் சற்றுப்பார்ப்போம்? எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. நான் பூப்பெய்த நாளில் துண்டு துணியைத்தான் பயன்படுத்த  எனக்குக் கொடுத்தார்கள்.   பள்ளியில் தோழிகள் மூலம்தான் நாப்கின்கள் எனக்கு அறிமுகமாயின. குறைந்த வருமானம் கொண்
ட எங்கள் குடும்பத்தில் தயங்கித் தயங்கி அம்மாவிடம் சொன்னேன், எனக்கு நாப்கின்கள் வேண்டும் என்று. அம்மா, அப்பாவிடம் சொன்னார். அப்பா தயங்கித் தயங்கி கடைக்காரரிடம் நாப்கினைக் கேட்டார். கடைக்காரரோ, கள்ளப்பொருளை பதுக்கி வைத்திருப்பதுபோல, ஏதோ ஒரு மறைவிடத்திலிருந்து நாப்கின் பாக்கெட்டை எடுத்து காகிதத்தில் சுற்றி, கருப்புப் பையில் போட்டு மிகவும் பௌவியமாக  அப்பாவிடம் கொடுத்தார். வீட்டில் அம்மா, அதை யார் கண்ணிலும் படாதவாறு   பதுக்கிவைத்தார்.  தம்பியின் கண்ணில் பட்டுவிட்டால், அவனுக்கு என்ன சொல்லிப் புரியவைப்பது என்ற கவலை வேறு.  நாப்கினை தாண்டி உதிரப்போக்கு ஆடையில் பட்டுவிட்டால் அந்தப் பெண்ணும், அவளைச் சுற்றி இருப்பவர்களும் படும் பாடும்,  படுத்தும் பாடும்  அதையே ஒரு சமூக நாவலாகவும், பெண்ணிய நாவலாகவும் எழுதலாம்.
வீட்டில்தான் இப்படி என்றால், பள்ளிக்கூடத்தில் வேறுமாதிரியான சம்பவங்கள் நடக்கும்.  பள்ளிப்பை சோதனையில் சில வேளைகளில் மாணவிகளின் நாப்கின்கள் மாணவர்களின் கையில் அகப்படுவதுண்டு. அப்போது அவர்களின் நமட்டுச் சிரிப்பும், இது என்ன? என்று அவர்கள் கேட்கும் அறியாமையும் மாணவிகளைச் சங்கடத்தில் ஆழ்த்தும். சற்று விசயம் தெரிந்த  மாணவர்கள், கிண்டல் அடிப்பதும், ஜாடை பேசுவதும் மாணவக்குறும்பையும் தாண்டி மாணவிகளின் மண்டையை சூடேற்றும். படித்த இளைஞர்களுக்குக் கூட இவ்விசயத்தில் விழிப்புணர்வு இல்லாதது  மிகவும் வருத்தமான விசயம்தான்.
மாதவிலக்கு ஏற்பட்ட பெண்களை இயல்பாக இருக்க விடுவதற்கு அந்தப் பெண்ணைச் சார்ந்த பெண்களே அனுமதிப்பதில்லை. மாதவிலக்கு வந்த பெண்கள், கோயிலுக்குப் போகக்கூடாது. செடிக்கு தண்ணீர் ஊற்றக்கூடாது. சோபாவில் உட்காரக்கூடாது.  குழந்தைகளைத் தூக்கக்கூடாது. நிகழ்வுகளில் கலந்துகொள்ளக்கூடாது.... இப்படியான சமூக நெருக்கடிகள் பெண்களின் இயல்பு மனநிலையைக் கெடுத்து விடுகின்றன.  விழா நாளில் மாதவிலக்கு வந்துவிட்டால், வீட்டு வேலைகளை விலக்கி விலக்கிச் செய்கிறாய், அதனால்தான் தீட்டுவந்து உன்னை விலக்கிவைத்து விட்டது என்று என் அம்மாவும், பாட்டியும் என்னை விழா சம்பந்தப்பட்ட எந்த வேலையையும் கொடுக்காமல் திட்டித் தீர்ப்பார்கள். அப்போது எனக்கு அறிவியல் தெரியாது. 28 நாள்களுக்குப் பிறகு மாதவிலக்கு என்பது பெண்களின் சீரான ஆரோக்கிய நிலை கொண்ட மாதவிலக்கு சக்கரம் என்று அன்று எனக்கு அவர்களுக்குச் சொல்லத்தெரியவில்லை.
 இங்கே பெண்களுக்கு மாதவிடாய் வந்தாலும், வராவிட்டாலும் சங்கடங்கள்தான் மிஞ்சுகின்றன.  ஒரு பக்கம் தீட்டு என்று பெண்களை ஒதுக்கும் அதே இந்திய சமூகம்,  மறுபுறம்  பூப்படைந்த  பெண்ணுக்கு சடங்கை   செய்வதற்கான காரியம் மட்டும் ஏன் என்ற குழப்பம் இன்னும் எனக்குள் இருக்கிறது.  


'கடாரம்' ராஜேந்திர சோழனுடையதா? 1

பாகம் 1

-யோகி


கெடா மாநிலத்தில் உள்ள  லெம்பா பூஜாங் எனப்படும் பூஜாங் பள்ளத்தாக்கு பல மர்ம முடிச்சுகளைப்  போட்டுக்கொண்ட வரலாற்றுப் பிறப்பிடமாகும். வெகு நாள்களாக நான் அங்கு செல்ல வேண்டும் என்று எண்ணியிருந்தேன். கடல்தாண்டி  அடுத்த நாட்டிற்குச் செல்ல முடிந்த என்னால்,  மணிநேரப் பயணத்தில் இருக்கும் பூஜாங் பள்ளத்தாக்கிற்குச் செல்வதற்கு நேரம் இல்லை என காரணம் கூறிக்கொண்டிருந்தேன்.

இந்நிலையில்  அண்மையில்  நண்பர் பாலமுருகனின் புத்தகவெளியீட்டு நிகழ்வைப் பயன்படுத்திக்கொண்டு  லெம்பா பூஜாங்கைப் பார்த்துவிட்டு வந்துவிட வேண்டும் என்று முன்கூட்டியே திட்டம் வரைந்திருந்தேன். அதைச் செயல்படுத்த நண்பர்கள் எனக்கு துணையாக இருந்தது, மேலும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.
நான் அகழ்வாராய்ச்சி மாணவியல்ல. அந்தத் துறையில் படித்ததும் அல்ல. ஆனால் வரலாற்றுத் தாகம் கொண்டவள். தேடலில்  இருக்கும் சுகத்தை நன்கு ருசி கண்டவள் என்ற காரணத்தினால், லெம்பா பூஜாங்கில் எனக்கான தீனி கிடைக்கும் என்று எதிர்பார்ப்புடன் இருந்தேன்.

குறிப்பிட்ட நேரப்படி நண்பர்களுடன் லெம்பா பூஜாங்கை அடைந்தேன்.  சூரியக்கீற்று இயற்கையின்மீது தனது நிழலை பதியத்தொடங்கிய அந்த நேரம், எனது ‘ஐ பேட்டில்'  மனதுக்கு நெருக்கமாகும் அனைத்தையும் நிழல்படம் எடுக்கத்தொடங்கினேன். எப்போதும் நான் எதை எதையெல்லாம்  புகைப்படம் எடுக்கலாம் என திட்டமிடுபவள் இல்லை.   கண்ணில் படும் காட்சிகள் மனதைப் பாதிக்கும்போது அனைத்தும் புகைப்படமாக மாறிவிடும். லெம்பா பூஜாங்கில் அதற்குக் கொஞ்சமும் பஞ்சம் வைக்கவில்லை. அதைவிடவும் உடன்வந்த நண்பர்கள் என்தேடலுக்குத்  தடையாகவும், முகம்  கோணுபவர்களாகவும் இல்லாததால்  என் ரசனைக்கு எந்தவகை  இடையூறும் ஏற்படவில்லை.

வெயிலுமில்லாத, குளிருமில்லாத  அந்தக் காலைப்பொழுது லெம்பா பூஜாங் சமவெளியைச் சுற்றிப்பார்ப்பதற்கு ஏற்ற நேரமாக அமைந்திருந்தது.
நான் கேள்விப்பட்ட வரையில் சோழன் கண்ட கடாரம் என்றுதான் பலர் கூறியிருக்கிறார்கள். கெடா என்ற சொல் கடாரம் என்ற சொல்லின் வழி வந்தது எனவும் குறிப்பிடுகிறார்கள்.  அதாவது, கி.பி 1030-ஆம் ஆண்டுகளில் ராஜேந்திர சோழனின் ஆட்சிக் காலத்தில் தென் கிழக்காசியாவின் மீது படை எடுத்த போது, அந்நிலத்திற்குக் கடாரம் என்று பெயரிட்டதாகவும் அது சுத்தமான தமிழ்ப் பெயர் என்றும், அந்தப் பெயரே மருவி நாளடைவில் கெடா என்று பெயர் பெற்றதாகவும் இணையத்தள செய்திகள் கூறுகின்றன.  அதோடு  ராஜேந்திர சோழன் காலத்தில் சோழனால் அமைக்கப்பட்ட வியாபார மையமாகவும், ஆட்சி புரியும் இடமாகவும் விளங்கிய இடம்தான்  பூஜாங் பள்ளத்தாக்கு என்றும் அறியப்படுகிறது.

‘பட்டிணபாலை' என்ற தமிழ் கவிதையில் இதுக்குறித்த விவரம்  இருந்ததாகவும், சோழன் காலத்தில் கடாரத்திற்கு வந்துசென்ற சீன, அரபு உள்ளிட்ட நாடுகளின்  நூல்களில் பூஜாங் பள்ளத்தாக்குக் குறித்த நிறைய தகவல்கள் இருப்பதாகவும், இத்தகவலை ஆராய்ச்சியாளர்களான  Braddly  மற்றும் Wheatly-தெளிவுபடுத்தியிருப்பதாகவும் இணையச் செய்திகள் ஆதரப்பூர்வமாக நமக்கு முன்வைக்கின்றன.
அதற்கு ஆதாரமாக 1980-ஆம் ஆண்டு கெடா மாநிலத்தில் கெடா மாநில சுல்தானால் திறந்து வைக்கப்பட்ட தொல்பொருள் அருங்காட்சியகத்தில் சில அகழ்வாய்வுச் சின்னங்கள், உடைந்த சிலைகள், கட்டட அமைப்புகள்  போன்றவை இந்திய அடையாளங்களின் தொடர்பாகச் சாட்சியமளித்தாலும், புத்த வழிபாட்டுக்கான அடையாளங்களும்  இருந்ததற்கான சாத்தியக்கூறுகளையும் காண முடிகிறது.

பொதுவாக உணர்ச்சிப்பூர்வமாகப் பேசும் இந்தியர்கள் சோழ மன்னர்கள் கடல்வழியாகக்  கெடாவை வந்தடைந்து, அருகில் உள்ள மலைகளில் ஏறி மாபெரும் சாம்ராஜியத்தை அமைத்தனர்  என்றும் வெள்ளையர்கள்தான் கூலிகளாக இந்தியர்களை நாட்டிற்குக் கொண்டு வந்தார்கள் என்பதைவிட, அதற்கு முன்பே தமிழர்கள் சோழ காலத்தில் இந்த மலாயா மண்ணில் கால் பதித்துவிட்டனர் என்றும் கூறுவது உண்டு.

ஆனால், கெடா என்ற சொல் பெற்றதற்கு வேறு பல காரணங்களும் கூறப்படுகின்றன. அதாவது, ‘கெடா' என்ற சொல் ‘கதஹா' அல்லது ‘கடாரா' என்ற சமஸ்கிருத மொழியிலிருந்து எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதே வார்த்தைகள் தமிழ்மொழியில் ‘கடாரம்', ‘கலகம்' என்ற சொற்களிலிருந்து தழுவப்பட்டவை என்றும் கூறப்படுகிறது. ‘கடாரம்' என்றால் ‘பெரிய கடாய்' என்று பொருள். ‘கலகம்' எனப்படுவது கருப்பு நிறமென பொருள்படுகிறது. இதற்கிடையில், வில்கின்சன் என்பவர், ‘கெடா' என்ற சொல் ‘Kheddah' எனும் வார்த்தையிலிருந்து உருவானதாகக் கூறுகிறார். அதற்கு ‘யானை வலை' என்று பொருள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் சில தகவல்களில் ‘கெடா' எனும் வார்த்தை அரபு மொழியிலிருந்து தழுவப்பட்டது என்றும் குறிப்பிட்டுள்ளன. அம்மொழியில் கெடா என்பதற்கு கால்கள் கொண்ட கிண்ணம் என்று பொருளாகும். ரொலண்ட் பிராட்டெல் எனும் எழுத்தாளர், ‘கெடா' எனும் சொல் ‘Gedda' என்ற வார்த்தையிலிருந்து வந்தது என்கிறார். இந்தச் சொல்லானது இந்தி மொழியில் ‘khadar' எனக் கூறப்படுகிறது. இதற்கு ‘ நெல் வயலுக்கு உகந்த மண்' என்று பொருள் எனவும் அவர் கூறியுள்ளார். அதோடு, பெர்சிய மொழியின் ‘கலா' எனும் சொல்லிலிருந்துதான் ‘கெடா' எனும் வார்த்தை உருவானதாகவும் தகவல்கள் சொல்கின்றன. அதற்கு ‘நகரம்' என்று அர்த்தமும் கூறப்படுகிறது.


 மேற்கூறிய அனைத்தும் ஏதோ ஒரு வழியில்  கெடா என்ற பெயர் பெற்றதற்கான காரணத்தைக் கூறினாலும்  அனைத்தும் பொருந்தக் கூடியவையாகத்தான் உள்ளன. இருப்பினும்  தஞ்சாவூர் கோயிலில் இருக்கும் வெட்டெழுத்தில் கடாரத்தின் பயணத்தைப் பற்றிக் குறிப்பு இருப்பதால் சோழன் மூலம்தான்  கெடா பெயர் பெற்றது என்பது உறுதியாக நம்பப்படுகிறது.  ஆனால், நான் தேடிச்சென்ற பூஜாங் பள்ளத்தாக்கில் அதற்கான ஆதாரங்களும், விசயங்களும் இல்லாதது என் தேடலுக்குச் சோர்வைத் தட்டிவிடுமோ என்ற  ஐயத்தை ஏற்படுத்தியது.

 (தேடல் தொடரும்)

செவ்வாய், 23 செப்டம்பர், 2014

தற்கொலைக்கு தூண்டும் தற்கொலைகள்

தற்கொலைக்கு தூண்டும் தற்கொலைகள்
     

      தற்கொலை செய்துகொள்வது உலக அளவில் அதிகரித்து வருவது வருத்தத்தைத் தருவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.  உலக அளவில் மாரடைப்புக்குப் பிறகு மரணத்திற்கு முக்கிய காரணமாக அமைவது தற்கொலைதான்  என்ற அதிர்ச்சி தகவலை உலக சுகாதார அமைப்பு  தற்போது நமக்குக் கொடுக்கிறது. உலகமுழுவதும் ஏறக்குறைய 10 லட்சம் பேர் தற்கொலையால் மரணமடைகிறார்கள் என்ற அதிர்ச்சித் தகவலையும் அது சொல்கிறது. நமது நாட்டை பொறுத்தவரை  2011-ஆம் ஆண்டு சுகாதார அமைச்சு மேற்கொண்ட ஆய்வின் படி ஒரு வருடத்தில்  300-க்கும் அதிகமானவர்கள் தற்கொலை செய்துகொள்கிறார்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
     அதேவேளையில்,  தற்கொலை செய்துக்கொள்ள  1.7 விழுக்காட்டினர் எண்ணம் கொள்கிறார்கள் என்றும், தற்கொலைக்கு  0.9 விழுக்காட்டினர்  திட்டமிடுகிறார்கள் என்றும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டவர்கள் 0.5 விழுக்காட்டினர் என்றும்   மலேசிய சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது. 
இந்தியர்களைப் பொறுத்தவரை தற்கொலைக்கென்று ஒரு வரலாற்று பதிவே இருக்கிறது என்று இணையத்தள செய்திகளும் பதிவுகளும் நமக்கு உணர்த்துகின்றன. உண்மைதான்.  கணவன் இறந்துவிட்டால் பெண்கள் உடன்கட்டை ஏறும் வழக்கம் பெருமைக்குரிய விஷயமாக நமக்கு இருந்திருக்கிறது அல்லவா?  என்னைப் பொறுத்தவரையில் அதற்குப் பெயர் கொலை என்பேன். ஆனால், அதை  தற்கொலை என்றுகூட ஏற்றுக்கொள்ளாத விதண்டாவாதிகள் நம்மத்தியில் இருக்கவே செய்கிறார்கள். உடன்கட்டை ஏறிய தர்ம பத்தினிகள் தெய்வங்களுக்கு நிகரானவர்களாம்.  பெண்களும் தனது மூடிய வாயைத் திறக்காமல்  நெருப்பிற்கு சாம்பலாகிப் போனார்கள். உண்மையில் இவர்கள்தான் மகா மகாக்கோழைகள் என்பேன் நான்.
அதோடு, மன்னருக்காக உயிரைவிடுவது  இந்தியக் கலாச்சாரத்தில் தியாகமாகவே  கருதப்பட்டு வந்திருக்கிறது.
    அதற்குப் பழந்தமிழ் இலக்கியங்களே நமக்கு சாட்சியாக இருக்கின்றன. வீரர்கள் தங்களின் ராஜ விசுவாசத்தைக் காட்ட ஆறு விதமான தற்கொலை முயற்சிகளை  வரையறுத்து வைத்துள்ளார்கள் என்ற வரலாற்றுக் குறிப்புகளும் நமக்கு இருக்கின்றன. தொல்காப்பியத்தில்கூட அதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. போர்களில் தோற்றுப்போகும் போது, அந்த அவமானத்தை போக்கிக்கொள்ள அல்லது அதற்குத் தண்டனையாக தங்கள் தலைமுடியாலேயே கழுத்தை இறுக்கித் தற்கொலை செய்துகொள்வது தமிழ்நாட்டில் வழக்கமாக இருந்திருக்கிறது என்று இணையச் செய்திகள் தெரிவிக்கின்றன. அதோடு, தங்கள் தளபதியின் வெற்றிக்காகவும் பலவீரர்கள், நேர்ந்துகொண்டு  உயிரை மாய்த்துக்கொள்வார்களாம். தற்கொலைகள் அல்லது கொலைகளை மிக சாதூர்யமாக புனிதப்படுத்தப்பட்ட  சில உதாரணங்கள் இவை. இந்தியாவில், இன்னும் தொடர்ந்துவரும் தொண்டர்கள் தீக்குளியல் அதன் தொடர்ச்சிதான் என்பதையும் நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். 
     இன்று உலகளவில் தற்கொலைகள் ஒரு டிரெண்ட் அளவுக்கு பெருகிவருவது  அதிர்ச்சி மட்டுமல்ல, வருத்தமான செய்தியாகவும் இருக்கிறது. உலகில் 40 வினாடிகளுக்கு ஒருவர் தற்கொலை செய்துகொள்கிறார் என்ற செய்தியும் உலக சுகாதார நிறுவனம் கூறியிருக்கிறது.  உலகப் புகழ்பெற்ற பிரபலங்களின் தற்கொலைகளில் ஆகக் கடைசியாக  ஹாலிவுட் நடிகர் ரோபின் வில்லியம்ஸின் தற்கொலை நிகழ்ந்துள்ளது. அதன் பிறகு உலக சுகாதார நிறுவனம் மேற்கொண்ட ஆய்வின் தகவல் செப்டம்பர் 4-ஆம் தேதி வெளியிடப்பட்டது.  இதுகுறித்துப்  பேசிய இந்நிறுவனத்தின் தலைவர் டாக்டர் மார்கரேட் சான், தற்கொலை தொடர்பான செய்திகளை ஊடகங்கள் அதிகமாக வெளியிடுவதால், அதைப்பார்த்து பலருக்குத் தற்கொலைக்கு முயற்சிக்கும் எண்ணம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. உண்மையில் தற்கொலைகளைத் தடுக்க முடியும். இதற்குச் சம்பந்தப்பட்ட நாடுகள் விழிப்புணர்வு நடவடிக்கைகளை அதிகரிக்க வேண்டும். சமுதாயத்தின் பெரும் பிரச்னையாக தற்கொலை உள்ளது. அதை தடுத்து நிறுத்த வேண்டியது அவசியம் என்று சான் கூறியுள்ளார்.
மொத்தம் 172 நாடுகளிடம் தற்கொலைப் பற்றிய விவரங்களைத் திரட்டி இந்த ஆய்வறிக்கையை உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ளது.
    பூச்சி மருந்து அருந்தியும், தூக்கில் தொங்கியும் உயிரை மாய்த்துக்கொள்வது உலகளவில் அதிகமாக நடக்கிறது. ஆசிய நாடுகளின் நகர்ப்புறங்களில் வசிப்பவர்கள் அடுக்குமாடி கட்டடங்களின் மேலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்வோரின் எண்ணிக்கை  அதிகமாக உள்ளதும் தெரியவந்துள்ளது. உலகளவில் பெண்களைவிட ஆண்களே அதிகமாக தற்கொலை செய்துகொள்வதும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. 
இந்நிலையில்  தற்கொலைகள் வேகமாக பெருகிவருவதில் ஊடகங்களுக்குப் பெரிய பங்குண்டு என்று பரவலாகத் தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக, பிரபலங்களின் தற்கொலைகளை ஊடகங்கள் கொண்டாட்ட மனநிலையிலேயே பிரசுரிப்பதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது. அதாவது  பிரபலம் மரணத்தை தழுவியபிறகு அச்சு ஊடகங்களும், ஒளி ஊடகங்களும் ஒரு கவர்சிகரமான நிகழ்வை சித்தரிப்பதுபோல் அரங்கேற்றுகிறார்கள். அவர்களின் அந்தரங்கத்துக்குள் அத்துமீறி நுழைந்து ஊடகங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன.  இன்னும் அழுத்தமாகச் சொன்னால் அவர் எப்படி தற்கொலை செய்துகொண்டார் என்பதை, காட்சிக்கு காட்சி வரைப்படத்தை வரைந்து ஒரு கையேடு அளவுக்கு காட்சிப்படுத்துகிறார்கள் என்ற குற்றச்சாட்டை மனசாட்சியுள்ள  ஊடகங்களாலும் மறுக்க முடியாது.  தற்கொலை மனநிலையிலிருந்து  மனதை அலையவிட்டுக்கொண்டிருக்கும் ஒருவர் இந்த செய்திகளைப்  பார்க்கும்போது, அவர் மனம் நேரடியாக தற்கொலையை நோக்கிச் செல்லும் என உலவியலாளர்களால் கூறப்படுகிறது.

   தற்கொலைகளைத் தடுப்பதில் ஈடுபடும் அனைத்துலக சங்கம், தற்கொலைப் பற்றி செய்தி வெளியிடும்போது,  தோல்வி என்கிற வார்த்தையைப் பயன்படுத்தக் கூடாது என்கிறது. மேலும் தற்கொலைப் பற்றிய செய்திகளை எழுதும்போது வெற்றிகரமான தற்கொலை என்றும் தற்கொலை முயற்சி தோல்வியடைந்தது  என்றும் படிக்கும் வாசகர்களுக்கு  எதிர்மறையான எண்ணத்தை வெளிப்படுத்தும் என்று அந்தச் சங்கம் கோடிகாட்டியுள்ளது. மனநல வல்லுநர்களோ தற்கொலைப் பற்றிய செய்திக்கே ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது என்று  சொல்கிறார்கள். 
நமது நாட்டைப் பொறுத்தவரை  2013-ஆம் ஆண்டு 13-வது தேர்தலுக்கு முன் எடுக்கப்பட்ட தற்கொலை கணக்கெடுப்பில் மூன்று ஆண்டுகளில் 1,156 பேர் தற்கொலை செய்துகொண்டது பதிவு செய்யப்பட்டுள்ளது.  அதில் அதிகமானவர்கள் 24 வயதிலிருந்து 44 வயதுக்குட்பட்டவர்களாவர். உலகக் கணக்கெடுப்பில்  தற்கொலை செய்துகொள்வது  அதிகமாக ஆண்களாக இருந்தாலும், நமது நாட்டில் பெண்கள்தான் அதிகமாக தற்கொலை செய்துகொள்கிறார்களாம். இனரீதியாக பார்க்கும்போது சீனர்கள் 48 சதவிகிதமும், இந்தியர்கள் 21 சதவிகிதமும், மலாய்க்காரர்கள் 16 சதவிகிதமும், பிற இனத்தவர்கள் 13 சதவிகிதமும்  உயிரை மாய்த்துக்கொள்வதாக மலேசிய சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது. 
தற்கொலை நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் சட்டரீதியில் குற்றவாளிகளாகக் கருதப்படுகின்றனர். அவர்களுக்கு எவ்வாறான  தண்டனை கிடைக்கிறது என்றும் அவர்களுடனான விசாரணை எவ்வாறு வகை செய்கிறது என்றும்   பிரபல வழக்கறிஞர் மனோகரன் மலையாளத்தை சந்தித்தபோது...
வழக்கறிஞர் மனோகரன்

    பீனல் கோர்ட் 309 சட்டத்தின்படி, தற்கொலைக்கு முயற்சிப்பவர் மீது அதிகபட்சம் ஒரு வருட சிறைத் தண்டனையும், அபராதமும் அல்லது இரண்டுமே விதிக்க சட்டம்  வகை செய்கிறது. உண்மையில் தற்கொலைக்கு  முயல்பவர்கள் உளவியல் ரீதியில் பாதிக்கப்படுவதால் அவர்களுக்குத் தேவை தண்டனை அல்ல;  மனநல ஆலோசனைதான். அந்த வகையில் நமது அரசாங்கம்  தற்கொலைக்கு முயற்சிப்பவரின் நிலையறிந்து  உதவிகளைச்  செய்துவருவது வரவேற்கக்கூடியது.
  
    தற்கொலைக்கு முயற்சித்தவர்களும்  போலீஸ் பிரச்னையிலிருந்து தப்புவதற்காகக் கவனக்குறைவால் நடந்துவிட்டதைப் போலவும், விபத்தைப்போலவும் கூறிதப்பிக்கொள்கின்றனர்.  என்னைப் பொறுத்தவரையில் தற்கொலை சிந்தனையில் இருப்பவர்களுக்குத் தேவை மனநல ஆலோசனைதான்” என்றார்.
  
   கடந்த செப்டம்பர் 10-ஆம் தேதி  உலக தற்கொலைத் தடுப்பு தினம் அனுசரிக்கப்பட்டது.  தற்கொலை என்பது இறப்புகளுக்கான காரணத்தில் 13-வது  இடத்தில் உள்ளதாக உலக சுகாதார அமைப்புத் தெரிவித்திருந்தது.  சிலரின் தற்கொலைக்குக் காரணம் தெரியும் வேளையில், பலரின் தற்கொலைகள்  மர்ம முடிச்சாகவே புதைகுழியில் அடக்கம் செய்யப்படுகின்றன.